ராத்திரி நேரம்.. பஸ்சுக்குள் 40 பேர்.. ஒண்டிப்புதூர் மேம்பாலத்தில் 'டமால்'.. டிரைவர் சஸ்பெண்ட்!
மதுபோதையில் பஸ் ஓட்டிய டிரைவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
Recommended Video
கோவை: பஸ் கோணல் மாணலாக ஓடிக் கொண்டிருந்ததை பார்த்ததும் பயணிகளுக்கு தூக்கி வாரிப்போட்டது! பிறகுதான் தெரிந்தது டிரைவர் ஃபுல் போதையில் இருக்கிறார் என்று!
நேற்று முன்தினம் TN39 N 0012 என்ற எண் கொண்ட தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு சொந்தமான அரசு பஸ் ஒன்று கோவையிலிருந்து திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்தது.. ராத்திரி நேரம்.. பஸ்சுக்குள் 40 பேர் உட்கார்ந்து இருந்தார்கள்.
ஒண்டிபுதூர் மேம்பாலம் அருகே சென்றபோது திடீரென ஒரு இடத்தில் பலமாக உரசியது. இதனால் பஸ்ஸில் இருந்தவர்கள் ஒரு செகண்ட் பதறினார்கள். திரும்ப திரும்ப பஸ், கன்னாபின்னாவென்று ரோட்டில் போகவும், பயணிகள் கம்பியை இறுக்கமாக பிடித்து கொண்டனர்.
மதுபோதை
அதிலும் டிரைவர் அருகே உட்கார்ந்திருந்த ஒரு பெண், டிரைவரை கொஞ்ச நேரம் கவனித்துவிட்டு, அவர் போதையில் இருக்கிறார் போலும் என்று சொன்னார். உடனே எல்லா பயணிகளும் ஒன்று சேர்ந்து டிரைவர் போதையில்தான் இருக்கிறார் என்பதை உறுதி செய்தனர்.
வாக்குவாதம்
உடனே வண்டியை ஒண்டிபுதூர் இருகூர் பிரிவு அருகே நிறுத்த சொன்னார்கள். அதுவரை உயிரை கையில் பிடித்து கொண்டிருந்த பயணிகள், வண்டியை டிரைவர் நிறுத்தியதும், அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்கள்.
விசாரணை
நாக்கை பிடுங்கி கொள்கிற அளவுக்கு கேள்விகளை கேட்டார்கள். ஆனால் டிரைவர் ஒரு வார்த்தைகூட பதில் சொல்லாமல் தள்ளாடிக் கொண்டே இருந்தார். இதனால் பயணிகள் இன்னும் ஆத்திரமானார்கள். உடனடியாக சிங்காநல்லுார் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இது சம்பந்தமான விசாரணையும் ஆரம்பமானது. பஸ்ஸை ஓட்டியவர் கரூரை சேர்ந்த சுப்பிரமணியம் என்பதும் வயது 42 என்பதும் தெரியவந்தது.
சஸ்பெண்டு
ஒரு பக்கம் டிரைவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தும், மறுபுறம் போக்குவரத்து கழக அதிகாரிகள் துறை ரீதியாகவும் விசாரித்தனர். இதில் கட்டமாக, இன்று டிரைவர் சுப்பிரமணியம் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார்.