ஒன்னாப்பு படிக்கிற சிவா தனி மனுஷன் கிடையாது.. ஊரே கூடி சேவகம் செய்யுது பாருங்க!
வால்பாறை: ஊருக்கென்று ஒரு பள்ளிகூடம் திறக்கப்படும்.. ஆனால் ஒரே ஒருத்தனுக்காக பள்ளிக்கூடம் திறக்கப்படுமா? அப்படித்தான் சிவாவுக்காக திறக்கப்பட்டுள்ளது!
வால்பாறை சின்னக்கல்லார் 'டான்டீ' எஸ்டேட்டில் கடந்த 1943ம் ஆண்டு, ஒரு ஆதிதிராவிடர் அரசு நலப்பள்ளி துவங்கப்பட்டது. இந்த பள்ளியை தமிழக தலித் மற்றும் பழங்குடியினர் நலத்துறை நடத்தி வருகிறது.
இந்த பகுதியில் நிறைய யானைகள் நடமாடி கொண்டே இருக்குமாம். அடிக்கடி வீட்டு ஜன்னல், கதவுகளை அடித்து துவம்சம் செய்துவிடுமாம். அதனால், நிறைய பேர் இந்த ஊரை காலி செய்துவிட்டனர். நாளடைவில், இப்பள்ளியில், மாணவர்களின் சேர்க்கையும் குறைந்து கொண்டே இருந்தது.
நடமாட்டம்
போன வருஷம் இந்த பள்ளியில் ஒரு ஆசிரியர், ஒரு மாணவர், ஒரு தலைமை ஆசிரியர் மட்டும் இருந்தார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். அந்த ஒரு மாணவரும் வேற ஸ்கூலுக்கு போயாச்சாம். இப்போதைக்கு யானை நடமாட்டம் இல்லை என்றாலும், யாருமே இங்கு படிக்க வருவதில்லை. அதனால் பள்ளியும் போன வருஷமே மூடப்பட்டது.
5 வயது சிவா
இந்நிலையில், தேயிலை தோட்ட கூலி தொழிலாளி ராஜலட்சுமிக்கு இந்த பள்ளியில்தான் தன் மகனை படிக்க வைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார். சிவா என்ற மகன் இருக்கிறான், 5 வயதாகிறது. நம் விருப்பத்தை சொன்னால், அதனை ஏற்று ஸ்கூலை திறப்பாங்களோ, மாட்டாங்களோன்னு நினைச்ச ராஜலட்சுமி, இது சம்பந்தமான கோரிக்கையை கல்வி அதிகாரிகளிடம் வைத்தார்.
மாணவன்
ஒரு மாணவனுக்காக பள்ளியை திறப்பதா என்று அந்த அதிகாரிகள் யோசிக்கவேயில்லை. ராஜலட்சுமியின் ஆசையை பார்த்து வியந்த அதிகாரிகள், பள்ளியை திரும்பவும் திறக்க உத்தரவிட்டனர். பள்ளியும் இப்போது திறக்கப்பட்டு, செல்வகுமார் என்பவர் வாத்தியாராக நியமிக்கப்பட்டுள்ளார். சிவா இப்போது 1-ம் கிளாஸ் படிக்கிறான்.. நோட்டு, புஸ்தகம் தந்தாச்சு. யூனிபார்ம் மட்டும் இன்னும் தரலையாம்.
3 மணி நேரம்
இப்போது ஒரு சிக்கல் என்னவென்றால், பள்ளி அமைந்துள்ள சின்ன கல்லார் பகுதிக்கு போதிய பஸ் வசதி இல்லை. அதனால் வாத்தியார் காலைல 11:00 மணிக்குதான் ஸ்கூலுக்கு வருகிறார். மதியம் 2 மணிக்கே கிளம்பி விடுகிறார். அதனால் சிவாவுக்கு வெறும் 3 மணி நேரம் மட்டும்தான் படிப்பு சொல்லி தரப்படுகிறது