பொன் மாணிக்கவேலுக்கு விடாமல் ஆதரவு தரும் எச். ராஜா.. என்ன காரணம்?
Recommended Video
கோவை: சிலைத் திருட்டு வழக்குளை விசாரித்து வரும் சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேலுக்கு எச். ராஜா விடாமல் தொடர்ந்து ஆதரவு கொடுத்து வருகிறார். இது சலசலப்புகளையும், பல்வேறு கேள்விகளையும் எழுப்பி வருகிறது.
ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு அளித்துள்ள ஒரு பேட்டியில், பொன் மாணிக்கவேல் நடவடிக்கையெல்லாம் சரி. ஆனால் அவர் ஏன் இதுவரை ஒரு அர்ச்சகரைக் கூட கைது செய்யவில்லை. அவரை யாரேனும் மத ரீதியாக பின்னணியில் இருந்து இயக்குகிறார்களோ என்ற சந்தேகம் வருகிறது என்று கேட்டுள்ளார்.
பொன் மாணிக்கவேல் குறித்து இப்போது எதிர்மறை கருத்துக்களும் அதிகரித்து வரும் நிலையில் பொன் மாணிக்கவேலை தொடர்ந்து எச். ராஜா மட்டும் விடாமல் தீவிரமாக ஆதரித்துப் பேசி வருவதும், டிவீட் போட்டு வருவதும் விவாதத்துக்குள்ளாகி வருகிறது. இந்த நிலையில் கோவையில் செய்தியாளர்களிடம் எச். ராஜா பேசியுள்ளார்.
மக்களிடம் தான் கேட்க வேண்டும்
கடந்த ஒன்றரை ஆண்டுகளில் 140க்கும் மேற்பட்ட சிலைகளை மீட்டவர் நேர்மையானவரா என்பது குறித்து மக்களிடம் தான் கேட்க வேண்டும். பொன்.மாணிக்கவேல் மீது புகார் அளித்த காவல்துறை அதிகாரிகள் பின்புலத்தில் யாரோ இருக்கின்றனர். புகார் அளித்த காவல்துறை அதிகாரிகளின் பொருளாதாரத்தை சோதனை செய்ய வேண்டும்.
சிலைகளை திருடுவதற்கு தான்.
கோவை மாதம்பட்டியில் பூஜைகள் நடைபெறாமல் உள்ள ஒரு கோவிலை 2015லிருந்து புனரமைக்க அப்பகுதி மக்கள் இந்து சமய அறநிலையத்துறையிடம் மனு கொடுத்து காத்திருக்கின்றனர். இந்து சமய அறநிலையத்துறை கோவில்களை கைவிடப்படுவதே சிலைகளை திருடுவதற்கு தான்.
நடராஜர் , சிவகாமி சிலைகள்
அரியலூர் சுத்தமள்ளி ஊரில் உள்ள நடராஜர் , சிவகாமி ஆகிய இரு சிலைகள் நியூயார்க்கில் உள்ளது. எப்படி சென்றது? அங்குள்ள சிவன் கோவிலில் உள்ள 10 சிலைகள், அருகிலுள்ள பெருமாள் கோவிலில் இருந்த 8 சிலைகள் 45 ஆண்டுகளாக பூஜை செய்யாமல், பூட்டப்பட்ட நிலையில், 2007 ல் இந்து சமய அறநிலையத்துறை கோவிலை திறந்து புகைப்படம் எடுத்த அடுத்த ஒரு வாரத்தில் கோவிலில் கொள்ளை நடந்து 18 சிலைகள் திருடப்பட்டு நியூயார்க் சென்றது. அந்த வழக்கில் தான் ஜெர்மனியில் இருந்த சுபாஷ் கபூர், தீனதயாளான், சஞ்சீவி அசோகன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
ஊழல் நிறைந்தது
பந்தநல்லூர் பசுபதீசுவரர் கோவிலில் 300 கோடிக்கும் மேற்பட்ட சிலைகள் காப்பக்கத்தில் இருந்த சிலைகளை போலி செய்த வழக்கில் அதிகாரி கஜேந்திரன் கைது செய்யப்பட்டதை கண்டித்து, அறநிலையத்துறையினர் போராட்டம் நடத்தினால் மொத்த துறையையும் ஊழல் நிறைந்தது என்பது தானே அர்த்தம்.
50 ஆண்டுகள் திராவிட ஆட்சியில்
கவிதா, திருமகள் சிலை திருடர்கள் என்பதை ஆதாரங்களுடன் கைது செய்யப்பட்டதால் தான் நீதிமன்றம் நடவடிக்கை எடுத்துள்ளது. 50 ஆண்டுகள் திராவிட ஆட்சியில் இவ்வளவு சிலைகள் கடத்தப்பட்டது அவமானம் என்பதால், அதை மீட்பவரை ஊக்கம் கொடுக்க வேண்டுமே தவிர சந்தேகப்படக்கூடாது என்றார் எச். ராஜா.