கொரோனா குறித்து வதந்தி பரப்பியதாக.. ஹீலர் பாஸ்கர் அதிரடி கைது
கோவை: கொரோனா வைரஸ் தொடர்பாக வதந்தி பரப்பிய ஹீலர் பாஸ்கர் இன்று குனியமுதூர் போலீஸாரால் கைது செய்யப்பட்டார். இவர் மீது பொது சுகாதாரச் சட்டம், பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது.
Recommended Video
கொரோனா வைரஸ் பாதிப்பு உலகையே உலுக்கி வருகிறது. இதனால் உலகம் முழுவதும் 9000 பேர் இறந்துவிட்டனர். உலகம் முழுவதும் 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உலகம் முழுவதும் அந்தந்த நாட்டு அரசு நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அது போல் தமிழகத்திலுள்ள மாவட்டங்களில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
ஐரோப்பா நாடுகளிலிருந்து தமிழகம் வந்த 14 பேருக்கு கொரோனா அறிகுறி.. மருத்துவமனையில் அனுமதி
சும்மா இருப்பவர்கள்
கடந்த 18-ஆம் தேதி கோவை மாவட்டத்தில் சுகாதாரத் துறையினர் நோய் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். இது குறித்து மாற்று முறை சிகிச்சை தருவதாக கூறி வரும் ஹீலர் பாஸ்கர் ஆடியோ மூலம் வதந்தி பரப்பினார். அந்த ஆடியோவில் அவர் கூறுகையில் இது இலுமினாட்டிகளின் வேலை. சும்மா இருப்பவர்களை அதிகாரிகள் ஊசி போட்டு கொன்றுவிடுகிறார்கள். அரசு சொல்வதை கேட்க வேண்டாம் என கூறியிருந்தார்.
உரிய பிரிவுகள்
இந்த ஆடியோ சமூகவலைதளங்களில் வைரலானது. இதையடுத்து இதுகுறித்து அமைச்சர் விஜயபாஸ்கரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது அவர் கூறுகையில் வதந்திகளை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் அந்த வகையில் ஹீலர் பாஸ்கர் மீது காவல்துறை உரிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யும் என தெரிவித்திருந்தார்.
வழக்கு பதிவு
இந்த ஆடியோக்களை சமூகவலைதளங்களில் இருந்து நீக்க வேண்டும் என கோரிக்கை வலுத்து வருகிறது. இதையடுத்து ஹீலர் பாஸ்கர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுகாதாரத் துறை அதிகாரி புகார் அளித்தார். அதன் பேரில் ஹீலர் பாஸ்கரை இன்று குனியமுதூர் போலீஸார் கைது செய்தனர். அவர் மீது தமிழ்நாடு பொது சுகாதார சட்டம் 1939, பேரிடர் மேலாண்மை சட்டம் 2005 ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
நோய்கள்
ஹீலர் பாஸ்கர் மாற்று முறை மருத்துவத்தை கடைப்பிடித்து வருகிறார். இவர் வீட்டிலேயே சுகப்பிரசவம் பார்ப்பது, மருந்தில்லா மருத்துவத்திற்கு மாறுவது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். மேலும் சில நோய்களுக்கு நான் பேசுவதை கேட்டாலே அவை பறந்து போய்விடும் என கூறி வருகிறார். வீட்டிலேயே பிரசவம் பார்ப்பது எப்படி என்பது குறித்த ஒரு நாள் இலவச பயிற்சி முகாமை இவர் விளம்பரப்படுத்தியதை அடுத்து அவர் கடந்த 2018-ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.