எச்ஐவி ரத்தம் ஏற்றப்பட்ட விவகாரம்... அமைச்சர் விஜயபாஸ்கர் பதவி விலக அன்புமணி வலியுறுத்தல்
Recommended Video
கோவை: சென்னை மற்றும் சாத்தூரைச் சேர்ந்த இரு பெண்மணிகளுக்கு எச்.ஐ.வி ரத்தம் ஏற்றப்பட்ட விவகாரத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பதவி விலக வேண்டும் என பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
பாட்டாளி மக்கள் கட்சியின் புத்தாண்டு தலைமை செயற்குழு கூட்டம் கோவை வரதராஜபுரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
முன்னதாக, நாடாளுமன்ற உறுப்பினரான அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
பதவி விலக வேண்டும்
சென்னை மற்றும் சாத்தூரைச் சேர்ந்த இரு பெண்மணிகளுக்கு எச்.ஐ.வி ரத்தம் ஏற்றப்பட்ட விவகாரத்தில் தமிழகத்தில் சுகாதாரத்துறை சரியாக செயல்படவில்லை என்பதைக் காட்டுகிறது. எனவே சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அதிகாரிகள் பொறுப்பேற்று பதவி விலக வேண்டும். ஒரு மருத்துவராக நான் கூற விரும்புவது எச் ஐ வி ரத்தம் வழங்கியது மிக பெரிய தவறு. அதனை ஏற்க முடியாது என குறிப்பிட்டார்.
பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்
என்.எல்.சி விரிவாக்கத்திற்க்கு தடை செய்ய வேண்டும். அந்த பகுதி பாலைவனமாக்க விட கூடாது உயர்மின் கோபுரம் விவகாரத்தில் விவசாயிகளை அரசு ஏளனமாக பார்க்கிறது. குறைந்தபட்சம் பேச்சுவார்த்தையாவது நடத்த வேண்டும். அதேபோல்
இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தின் நியாயமான கோரிக்கைகளை ஏற்று ஊதியத்தை உயர்த்தி கொடுக்க வேண்டும்.
ஸ்டெர்லைட் பிரச்சனை
ஸ்டெர்லைட் ஆலை சட்டத்தை மதிக்காமல் செயல்படுகிறது. ஸ்டெர்லைட் விவாகரத்தில் மூத்த வழக்கறிஞர்களை வைத்து உச்சநீதிமன்றத்தில் வாதிட வேண்டும். டாஸ்மாக் பிரச்சினைக்கு மூத்த வழக்கறிஞர்களை கொண்டு உச்சநீதிமன்றத்தில் வாதிட்ட தமிழக அரசு, ஸ்டெர்லைட் விவகாரத்தில் அப்படி வாதிடவில்லை என குற்றம் சாட்டினார்.
சிறப்பு சட்டம் வேண்டும்
ஜனவரியில் சட்டமன்ற கூட இருப்பதால் காவிரி டெல்டாவைக் பாதுகாக்க ஒரு சட்டம் இயற்றி குடியரசு தலைவரிடம் ஒப்புதல் வாங்க வேண்டும். கஜா புயலில் பாதிக்கப்பட்ட விவசாயகளுக்கு இன்னும் முழுமையாக நிவாரணம் கிடைக்கவில்லை. மத்திய அரசு அணைகள் பாதுகாப்பு சட்டத்தைக் கொண்டு வருவது தேவையில்லாதது. அதனால் நமக்கு பாதகங்கள் தான் அதிகம் என்று கூறினார்.
அரசியலுக்கு வரட்டும்
ரஜினி காந்த் அரசியல் வருகை குறித்த கேள்விக்கு பதிலளித்த அன்புமணி ராமதாஸ் அரசியலுக்கு வருவோம் என்று சொன்னால் மட்டும் போதாது, வந்தால் பார்போம், வரட்டும் அவர்களுக்கு பதில் சொல்லலாம் என கூறினார்