விபூதி, குங்குமம் அணிந்து.. ஊடுருவிய பயங்கரவாதிகள்.. கோவையில் 2000 போலீஸார் சோதனை!
பயங்கரவாதிகள் ஊடுருவல் காரணமாக கோவையில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது
Recommended Video
கோவை: தமிழகத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவியதாக உளவுத்துறை எச்சரித்ததையடுத்து கோவையில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. விபூதி, குங்குமம் அணிந்து.. இந்துக்கள் போல வேடமிட்டு பயங்கரவாதிகள் வலம் வருவதாக சொல்லப்படுகிறது. இதனால் கோவையில் கமாண்டோ போலீஸ் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டுக்கு உள்ளே தீவிரவாதிகள் ஊடுருவி உள்ளதாக கூறப்படுகிறது. இவர்கள் மொத்தம் 6 பேர் என்றும், இலங்கை, பாகிஸ்தான் நாடுகளை சேர்ந்த இவர்கள், இலங்கை வழியாக தமிழகத்தில் நுழைந்து இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
இந்த தகவல்களை எல்லாம் உளவுத்துறை போலீசாருக்கு தந்து அலர்ட் செய்துள்ளது. உளவுத்துறை எச்சரித்த நிலையில், தீவிரவாதிகள் என சந்தேகிக்கப்படும் நபர்கள் என தெரிந்தால் அது சம்பந்தமாக உடனே போலீசாரை பொது மக்கள் தொடர்பு கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
கோவையில் பதுங்கியிருப்பதாக கூறப்படும் பயங்கரவாதிகள் லஷ்கர் இ-தொய்பா அமைப்பை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர். ஒருவேளை இலங்கை குண்டுவெடிப்பில் தொடர்புடையவர்களாக கூட இருக்கலாம் என்றும் யூகிக்கப்படுகிறது.
இவர்களில் ஒருவர் பாகிஸ்தானை சேர்ந்த இலியாஸ் அன்வர் என்றும், மற்றவர்கள் இலங்கை நாட்டை சேர்ந்த இஸ்லாமியர்கள் என்றும் உளவுத்துறை கூறுகிறது. இவர்களில் ஒருவர் நெற்றியில் விபூதி, குங்குமம் அணிந்து இந்துக்கள் போல வேடமிட்டு வலம் வருவதாகவும் சொல்லப்படுகிறது. கோவை ரயில்வே ஸ்டேஷன், பஸ் ஸ்டாண்டு, வழிபாட்டு தலங்களில் நடமாட வாய்ப்பு அதிகம் என்பதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு வருகிறது.
இதனால் கோவையில் கமாண்டோ போலீஸ் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். கூடுதல் டிஜிபி முரளி ஜெயந்த் தலைமையில் நகர் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதுகுறித்து கோவை போலீஸ் கமிஷனர் சுமித் செய்தியாளர்களிடம் பேசுகையில், 2000 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தீவிரவாதிகள் குறித்த எந்த புகைப்படத்தையும் போலீஸ் வெளியிடவில்லை. மக்கள் கவனமாக இருக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். பீதி அடையத் தேவையில்லை என்றார்.