"அண்ணே கை வைக்காதீங்க".. பெண்ணை அடித்த இந்து முன்னணி நபர்.. கோவையில் பரபரப்பு.. !
பெண்ணை தாக்கி உள்ளார் இந்து முன்னணி நபர் ஒருவர்
கோவை: "அண்ணே கை வைக்காதீங்க.. பேசிட்டு இருக்கும்போதே அடிக்காதீங்கண்ணே" என்று பெண் ஒருவர் கதற, அதையும் பொருட்படுத்தாமல் அடித்து தாக்குகிறார் இந்து முன்னணி கட்சி பிரமுகர் ஒருவர்.. இது சம்பந்தமான வீடியோவும் சோஷியல் மீடியாவில் பரவி வருகிறது.
கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள செம்மாண்டம்பாளையம் பகுதியில் வசித்து வருபவர் திலகம்... இவர்களுக்கு இங்கு விவசாய நிலம் ஒன்று சொந்தமாக உள்ளது... இந்த நிலத்தின் பக்கத்திலேயே உள்ள இடத்தை முருகேசன் என்பவர் வாங்கியுள்ளார்.
முருகேசன் இந்து முன்னணி நபர் என்று சொல்லப்படுகிறது.. திருப்பூரை சேர்ந்தவர். இந்து அமைப்பை சேர்ந்தவர் என்பதால், முருகேசனுக்குத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பும் தரப்பட்டுள்ளது.
இந்நிலையில், முருகேசன், தன்னுடைய நிலம் தவிர, சுற்றியுள்ள இடங்களையும் ஆக்கிரமித்து செய்து கொண்டதாக கூறப்படுகிறது.. அதாவது இருவரின் இடத்துக்கும் பொதுவான வழித்தடத்தையும் முருகேசனே ஆக்கிரமித்து கொண்டிருக்கிறார்.
மேலும், இந்த பொதுவழிதடத்தை முருகேசன் கம்பி வலை மூலம் அடைக்க முயன்றுள்ளார்... இதற்கு திலகம், ஏன் வழியை ஏன் அடைக்கிறீர்கள் என்று முருகேசனை தடுத்திருக்கிறார்.. இதனால் ஆத்திரமடைந்த முருகேசன், திலகத்தை கண்மூடிதனமாக தாக்கியுள்ளார். இதை திலகம் என்பவரும், அந்த பகுதி மக்களும் கடந்த வாரம் தட்டி கேட்டுள்ளனர்.. அவர்களை மிரட்டிய முருகேசன், விவசாயிகளையும் அவர்கள் வீட்டுப் பெண்களையும் மிரட்டி இருக்கிறார்.. மேலும் திலகத்தின் முதுகில் அடித்துள்ளார்..
இதை அங்கிருந்தோர் வீடியோ எடுத்துள்ளனர்.. அந்த வீடியோதான இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், திலகம் உட்பட பல பெண்கள் அந்த பகுதியில் வேலை பார்த்து கொண்டுள்ளனர்.. அந்த சமயம் காரில் வந்து இறங்குகிறார் முருகேசன்.. பிறகு திடீரென அந்த பெண்ணை தாக்க முற்படுகிறார்.. "அண்ணே கை வைக்காதீங்க.. பேசிட்டு இருக்கும்போதே அடிக்காதீங்கண்ணே" என்று கெஞ்சுகிறார் அந்த பெண்..
ஆனால், அதையும் பொருட்படுத்தாமல், குடும்பத்தையே கட்டி வெச்சு அடிப்பேன்" என்று முருகேசன் மிரட்டுகிறார். இந்த வீடியோ பெரும் அதிர்ச்சியை தந்துவருகிறது.. இதனிடையே கருமத்தம்பட்டி போலீசில் இது தொடர்பாக திலகம் புகார் தந்துள்ளார். அந்த புகாரின் பேரில் கருமத்தம்பட்டி போலீசார் முருகேசன் மீது மிரட்டல், ஆபாசமாக பேசுதல், காயம் ஏற்படுத்துதல் ஆகிய 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். மேலும் தாக்குதல் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.