இன்னும் இவங்க அடங்கவில்லையா.. திருந்தவில்லையா?.. கோவையை உலுக்கிய ஆணவ படுகொலை!
சாதி மறுப்பு திருமணம் செய்த நபர் கொலை செய்யப்பட்டார்
Recommended Video
கோவை: இன்னும் இவர்கள் எல்லாம் அடங்கவில்லையா? திருந்தவில்லையா என்றுதான் கேட்க தோன்றுகிறது. சாதி ஆணவ கொலை ஒன்று நேற்று நடந்துள்ளது. அது கோவை மாவட்டத்தில் நடந்துள்ளதுதான் பெரிய ஷாக்!
மேட்டுப்பாளையம் ஸ்ரீரங்கராயன் ஓடை பகுதியினை சேர்ந்தவர் கனகராஜ், வயசு 21. தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த வர்ஷினி பிரியா என்ற 18 வயதை காதலித்துள்ளார்.
ரெண்டு பேரும் வேற வேற சமூகம், வழக்கம்போல் வீட்டில் எதிர்ப்பு.. வழக்கம்போல் வீட்டை விட்டு வெளியேறி சாதி மறுப்பு கல்யாணம் செய்துள்ளனர். இதில் கனகராஜின் அண்ணன் வினோத்துக்கு ஆத்திரம் அதிகமாகிவிட்டது.
வெட்டி தள்ளினார்
தான் மறைத்து வைத்து இருந்த அரிவாளால் கனகராஜை சரமாரியாக வெட்டினார். ரத்த வெள்ளத்தில் அவர் அலறித்துடித்து அங்கேயே பிணமானார். அவரது அலறல் சத்தம் கேட்டு வர்ஷினி பிரியா ஓடி வந்து தடுக்க முயன்றார். ஆனால் அந்த இளம்பெண்ணின் தலை மற்றும் முகத்திலும் அரிவாளால் சரமாரியாக வெட்டினார். இதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தம்பியை வெட்டிக்கொன்ற அண்ணன் வினோத் இப்போது போலீசில் சரணடைந்துள்ளார்.
ஆணவ கொலை
பொதுவாக, சேலம், தருமபுரி போன்ற உள் மாவட்டங்களில், அதிலும் மிகவும் பின்தங்கிய கிராமிய சூழல், பாமரம் கலந்த அறியாமையால்தான் இப்படிப்பட்ட ஆணவ படுகொலைகள் அதிகமாக நிகழும் என்று கணிக்கப்பட்டு இருந்தது.
கோவையிலா?
ஆனால் கோவை மாவட்டத்தில் இப்படி ஒரு சம்பவம் கொஞ்சம் அதிர்ச்சிதான்.. ஏராளமான கல்வி நிறுவனங்கள், தொழில் சார்ந்த நிறுவனங்கள் நிறைந்த.. சென்னைக்கு அடுத்தபடியாக உள்ள கோவை மாவட்டத்தில் சாதி ஆணவ கொலை என்பது ஜீரணிக்க முடியாததே. ஏற்கனவே பொள்ளாச்சி விஷயத்தில் இன்னும் மீண்டு வர முடியாத நிலையில், தொடர்ந்து மக்களுக்கு பீதியை ஏற்படுத்தும் வகையியே நிகழ்வுகள் அந்த மாவட்டத்தில் நடந்து வருகின்றன.
புள்ளி விவரம்
உடுமலைப்பேட்டை சங்கர்- கெளசல்யா விவகாரத்தின்போதே இந்த நெருப்பு தண்ணீர் ஊற்றி அணைக்கப்பட்டிருக்க வேண்டும். அல்லது, ஆணவ படுகொலை என்ற விஷ செடியை வேரோடு பிடுங்கி இருக்க வேண்டும். ஆனால் தமிழகத்தில் 80க்கும் மேற்பட்ட ஆணவ கொலைகள் நடந்துள்ளதாக புள்ளிவிபரம் மற்றொரு பக்கம் பீதியை கிளப்புகிறது.
காவல்துறை
இதில் இன்னொரு வேதனையான விஷயம், ஆணவ கொலை என்று பகிரங்கமான செய்திகள் பெரும்பாலும் வெளிவருவது இல்லை. அது வெறும் கொலைதான் என்று காவல்துறையிலேயே மூடி மறைக்கக் கூடிய சூழலும் இதில் அடங்க உள்ளது.
அரட்டல்கள்
வீட்டில் காட்டும் அரட்டல், மிரட்டல்களை தாண்டி ஒரு ஜோடி கல்யாணம் செய்து கொள்ள துணியும்போது, தன் சாதி மக்கள் முன் தலை கவிழ கூடாது மானம் போய்விடக்கூடாது என்பதற்காக பெற்ற மகளின் மாங்கல்யத்தை பறிக்க இதுபோன்ற குடும்பத்தினர் நினைப்பதும், தாய்மை மறந்து... சாதீயம் தலை தூக்கப்படுவதும் எப்போது நிறுத்தப்படுமோ?