நீங்களே பணத்துக்கு கஷ்டப்படுவீங்க.. இருக்கட்டும், பரவாயில்ல.. 15 வீடுகளின் வாடகையை துறந்த கோவை காதர்
கோவை: கொரோனா வைரஸ் பாதிப்பால், வேலைகள் இல்லாமல், வாடகைக்கு குடியிருப்போர் வருமானம் இன்றி தவிப்பதை கனிவோடு கவனித்த, கோவையை சேர்ந்த ஒருவர், தனது 15 வீடுகளில் வசிப்போரிடமிருந்தும், இந்த மாத, வாடகை வேண்டாம் என அறிவித்து முன் உதாரணமாக மாறியுள்ளார்.
உக்கடம், லால்பேட்டையில் மீன் கடை நடத்தி வரும் காதர் என்பவர்தான், அந்த உரிமையாளர். தனக்கு சொந்தமான 15 வீடுகளையும் கூலி தொழிலாளிகளுக்கு வாடகைக்கு விட்டிருக்கிறார் காதர்.
இந்த நிலையில்தான், கொரோனா வைரஸ் பாதிப்பால், தமிழகம் முழுக்க முதலில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. நாடு முழுக்க லாக்டவுன் அறிவிக்கப்பட்டது. எனவே காதர் வீட்டில் தங்கி உள்ள கூலித் தொழிலாளிகள் வருமானம் இன்றி தவித்து வருகின்றனர்.
இந்த நிலையில்தான், 15 வீடுகளின் வாடகையும் தனக்கு வேண்டாம் என்று, தானாக முன்வந்து பெருந்தன்மையாக அறிவித்துள்ளார் காதர்.
"கொரோனா வைரசால், மறைமுகமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு தன்னால் முடிந்த உதவி இது என்கிறார் காதர். இதுபற்றி அவர் கூறுகையில், கூலித் தொழிலாளர்களுக்கு வேலை இல்லை. எனவே, சாப்பாடு, மருத்துவ செலவு போன்றவற்றிற்கு செலவிடத்தான், அவர்களிடம் உள்ள பணம் போதுமானதாக இருக்கிறது. எனவே அவர்களிடம் இந்த மாத வாடகையை தர வேண்டாம் என்று கூறியுள்ளேன்." இவ்வாறு காதர் தெரிவித்தார்.
இதுபற்றி, வாடகைக்கு குடிஇருக்கக்கூடிய லத்தீப் என்பவர், கூறுகையில், மாசாமாசம், சரியாக, வாடகை கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறோம். ஆனால் இப்போது எங்களிடம் வாடகை கொடுப்பதற்கு பணம் இல்லை. வேலைக்கு செல்லவில்லை என்றால் வருமானம் எப்படி வரும்? இந்த நிலையில்தான் எங்கள் வீட்டின் உரிமையாளர் வாடகை வேண்டாம் என்று சொல்லியுள்ளார். இது சந்தோஷம்தான். இதைவைத்து சாப்பாட்டுக்கு நாங்கள் செலவிடுவோம் என்று தெரிவித்தார்.
இதுதான் கொரோனா தாக்கிய நுரையீரல்..
Recommended Video
மருத்துவ பணியாளர்களை வீட்டைவிட்டு காலி செய்யுமாறு சில உரிமையாளர்கள் கூறுவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வருத்தம் தெரிவித்து சில நாட்கள்தான் ஆகிறது. ஆனால் கோவையில் வீட்டு உரிமையாளர் ஒருவர், இவ்வாறு மனித நேயத்தை வெளிக்காட்டி அசத்தியுள்ளார். இது இந்த சமூகத்தில் மனிதம் இன்னும் உயிர்ப்போடுதான் இருக்கிறது என்பதை காட்டுகிறது.