ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்க தமிழக தலைவராக கோவை முகமது அசாருதீன் உருவானது எப்படி? பகீர் தகவல்கள்
Recommended Video
கோவை: சர்வதேச பயங்கரவாத இயக்கமான ஐ.எஸ்.ஐ.ஸ். இயக்கத்தின் தமிழக தலைவராக செயல்பட்ட முகமது அசாருதீன் மற்றும் அவரது கூட்டாளிகளின் வீடுகள் உள்ளிட்ட இடங்களில் இன்று தேசிய புலனாய்வு ஏஜென்சி அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த முகமது அசாருதீன், ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தில் இணைந்தது தொடர்பான பகீர் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இலங்கை மட்டக்களப்பு காத்தாங்குடியை சேர்ந்த சஹ்ரான் ஹாஸிம், தேசிய தவ்ஹீத் ஜமா அத் என்ற அமைப்பை உருவாக்கினார். இஸ்லாமிய அடிப்படைவாத கொள்கைகளுக்காக இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது.
இதற்காகவே காத்தாங்குடியில் தனி மசூதி ஒன்றை கட்டி அதில் பிரசாரம் செய்து வந்தார் சஹ்ரான். அத்துடன் தமது பிரசங்கங்களை சமூக வலைதளங்களிலும் வெளியிட்டு வந்தார். மேலும் பயங்கரவாத இயக்கமான ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்துடன் இணைந்து தமது கொள்கைகளை பரப்பி வந்தார்.
தென்னிந்தியாவில் தாக்குதல் நடத்த ஐ.எஸ்.ஐ.எஸ். சதி... கோவை என்.ஐ.ஏ சோதனைகளின் பரபர பின்னணி!
சமூக வலைதளங்களில் சஹ்ரான்
சஹ்ரானின் வீடியோ உரைகளை கேட்டு இலங்கையில் மட்டும் இல்லாமல் இந்தியாவில் உள்ள இளைஞர்களும் அவருடன் தொடர்பு கொண்டனர். இந்த நெட் ஒர்க் அடிப்படையில்தான் இலங்கையில் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தை சஹ்ரான் உருவாக்கினார்.
இலங்கையில் தாக்குதல்
பின்னர் ஈஸ்டர் நாளில் தாம் உட்பட 9 தற்கொலைப்படையினர் மூலம் கொடூர தாக்குதல்களை சஹ்ரான் நடத்தினார். இதனிடையே கேரளாவை சேர்ந்த இளைஞர்கள் சஹ்ரானுடன் தொடர்பில் இருப்பதை இந்திய புலனாய்வு ஏஜென்சியான என்.ஐ.ஏ. கண்டுபிடித்தது.
ஒப்புதல் வாக்குமூலம் தந்த கேரளா இளைஞர்
மேலும் கோவையைச் சேர்ந்த 13 இளைஞர்களையும் வளைத்தது என்.ஐ.ஏ. இந்த இளைஞர்களை மூளை சலவை செய்ததாக முதலில் கேரளாவை சேர்ந்த ரியாஸை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்தனர்.
சிக்கும் அசாருதீன்
ஆனால் ரியாஸிடம் நடத்திய விசாரணையில் தமக்கு தமிழ் தெரியாது; அதனால் சஹ்ரானின் வீடியோ உரைகளை முன்வைத்து கோவையை சேர்ந்த அசாருதீன் மூலமே ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்துக்கு ஆட்சேர்ப்பு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன என ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தார்.
இதன்பின் இலங்கை தரப்பில் பகிர்ந்து கொள்ளப்பட்ட ஆவணங்களிலும் சஹ்ரானுடன் முகமது அசாருதீன் நேரடி தொடர்பில் இருந்தது உறுதியானது. தமிழகத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ்.இயக்கத்தின் தலைவராக அசாருதீன் செயல்பட்டு வந்துள்ளார். இதனடிப்படையில் அசாருதீன் மீது வழக்குப் பதிவு செய்து இன்று அதிரடி சோதனைகளை என்.ஐ.ஏ. அதிகாரிகள் நடத்தி வருகின்றனர். இந்த சோதனைகள் முடிவில் அசாருதீன் பிடிபடலாம் என கூறப்படுகிறது.