தமிழகம் வரும் மோடியை வரவேற்க தயார்.. இதை செய்வாரா? கோவையில் வெடித்த ஆ ராசா!
கோவை : 234 சட்டமன்ற உறுப்பினர்களும் சேர்ந்து நீட் வேண்டாம் என்று சொல்லி இருக்கின்றார்கள். இந்த தீர்மானத்தை ஏற்று அடுத்த கல்வியாண்டு முதல் நீட் தேர்வை ரத்து செய்கின்றோம் என தமிழகம் வரும் மோடி அறிவித்தால் நாங்கள் வரவேற்க தயார்.. மோடி செய்வாரா! என நீலகிரி தொகுதி எம்பியும், திமுக துணை பொதுச்செயலாளருமான ஆ.ராசா கேள்வி எழுப்பினார்.
கோவையில் திராவிடன் அறக்கட்டளை சார்பில், நான், நீங்கள், நாம் எல்லோரும் திமுகவிற்கு வாக்களிப்போம்- ஏன் ? என்ற புத்தக வெளியீடு விழா நடைபெற்றது. இதில் திமுக துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா கலந்து கொண்டு புத்தகத்தை வெளியிட்டார். புத்தகத்தை திமுக சுற்று சுழல் அணி செயலாளர் கார்த்திகேய சிவசேனாதிபதி பெற்றுக்கொண்டார்.
முன்னதாக திமுகவில் இணைந்த ஏராளமான இளைஞர்களுடன் ஆ.ராசா புகைபடம் எடுத்துக்கொண்டார். புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய ஆ.ராசா , இட ஒதுக்கீட்டிற்கு ஆபத்து இருக்கின்றது. ஓரே நாடு, ஒரே மொழி என்று சொல்கின்றனர் ,இந்துத்துவாவை பற்றி எழுதும் எழுத்தாளர்கள் கொல்லப்படுகின்றனர், பேசுபவர்களின் குரல் வளை நெறிக்கப்படுகின்றது.
டெல்லிக்கு காவடி
ஆரிய திராவிட போர் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு இப்போதும் தொடர்ந்து கொண்டு இருக்கின்றது. சமஸ்கிருதம் தெரிந்தால் டாக்டராக முடியும் என்று சொன்னவர்கள், இப்போது நீட் பாஸ் பண்ணினால் டாக்டராக முடியும் என்கின்றனர். இவற்றை எதிர்க்காமல் நமது தமிழக அமைச்சர்கள் டெல்லிக்கு காவடி தூக்கி கொண்டு இருக்கின்றனர்.
பாஜக மொழி மேலாண்மை
இந்திய துணை கண்டத்திலேயே பா.ஜ.கவை எதிர்க்கும் ஓரே தலைவராக மு.க.ஸ்டாலின் மட்டும் இருக்கின்றார். மத மேலாண்மை, மொழி மேலாண்மை செய்கின்ற பா.ஜ.க, அதிமுக மூலம் அதை திணிக்க முயல்கின்றது. என கூட்டத்தில் பேசினார்.
ஆ ராசா கேள்வி
நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஆ.ராசா, கூட்டுறவு கடனை ரத்து செய்ய உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த போது, கடனை ரத்து செய்வது சாத்தியமில்லை என தமிழக அரசு மனு தாக்கல் செய்தது. இப்போது தேர்தல் நேரத்தில் கூட்டுறவு பயிர் கடனை ரத்து செய்ய காரணம் திமுகவின் தேர்தல் அறிவிப்புகள்தான். இதற்கான முழு நற்பெயரும் திமுகவை சாரும்.
சொந்த புத்தி இல்லை
7.5 சதவீத இட ஒதுக்கீடும் திமுக தலைவர் ஸ்டாலின் கோரிக்கை வைத்த பின்பே வழங்கப்பட்டது. திமுக கேட்க கூடியதை செய்யும் அரசாக தமிழக அரசு இருக்கின்றது. அறிவிப்புகள் எதையும் அதிமுக அரசு சொந்த புத்தியால் செய்ய வில்லை எனவும்,திமுக தந்த புத்தியாலேயே செய்கின்றது.
வரவேற்கும் எடப்பாடி
மத்திய பட்ஜெட் தமிழகத்தக வஞ்சிக்கும் பட்ஜெட். பா.ஜ.க எதை செய்தாலும் அதை வரவேற்க கூடிய புத்தியை மனதில் வைத்திருக்கின்ற அரசாக தமிழக அரசும் முதல்வரும் இருக்கின்றனர்.
செய்வாரா மோடி?
234 சட்டமன்ற உறுப்பினர்களும் சேர்ந்து நீட் வேண்டாம் என்று சொல்லி இருக்கின்றார்கள். இந்த தீர்மானத்தை ஏற்று அடுத்த கல்வியாண்டு முதல் நீட் தேர்வை ரத்து செய்கின்றோம் என தமிழகம் வரும் மோடி அறிவித்தால் நாங்கள் வரவேற்க தயார்.. மோடி செய்வாரா! , பா.ஜ.க கூட்டணியில் பா.ஜ.க விற்கு அதிமுக ஆதாராமா அல்லது அதிமுகவிற்கு பா.ஜ.க ஆதாரமாக இருக்க போகின்றனரா என்ற அவர்களுக்குதான் தெரியும். பா.ஜ.க கூட்டணியை மக்கள் ஓட ஓட விரட்டுவார்கள்,200 தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றி பெறும்" இவ்வாறு ஆ ராசா கூறினார்.