கோவையில் பெட்ரோல் குண்டு வீச்சு.. நடவடிக்கை எடுக்காவிட்டால் மிகப்பெரிய போராட்டம்-ஹிந்து முன்னணி
கோவை: கோவையில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தில் காவல்துறை நடவடிக்கை எடுக்காவிட்டால் மிகப்பெரிய போராட்டம் நடைபெறும் என இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கூறினார்.
தமிழ்நாட்டில் கடந்த 3 நாட்களாக பல இடங்களில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டு வருகின்றன. இந்த பெட்ரோல் குண்டானது கோவையில் முதல் முதலாக சித்தாபுதூரில் உள்ள மாநகர பாஜக அலுவலகம் மீது வீசப்பட்டது.
அதிர்ஷ்டவசமாக இந்த குண்டு வெடிக்கவில்லை. இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில் தொடர்ந்து கோவையின் பல இடங்களில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன.
வெறும் 3 நாட்களில் 15 பெட்ரோல் குண்டு வீச்சு! பறந்த முக்கிய உத்தரவு.. பாட்டிலில் பெட்ரோல் விற்க தடை
கோவையில் துவங்கிய பெட்ரோல் குண்டு வீச்சு
அதாவது கோவை சித்தாபுதூர் பாஜக அலுவலகத்தை தொடர்ந்து கோவை ஓப்பணக்கார வீதியில் உள்ள துணிக்கடை மற்றும் 100 அடி சாலையில் உள்ள ரத்தினபுரி பாஜக மண்டலத் தலைவர் மோகனுக்கு சொந்தமான கடை மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. மேலும் பொள்ளாச்சி குமரன் நகர் பகுதியில் பாஜக நிர்வாகிகள் பொன்ராஜ், சிவா மற்றும் இந்து முன்னணி வார்டு பொறுப்பாளர் சரவணக்குமார் ஆகியோரின் வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன. பாக்கெட் பெட்ரோல் வீசப்பட்டு வாகனங்களுக்கும் தீவைக்க முயற்சி செய்யப்பட்டது.
போலீஸ் தீவிர விசாரணை
அதன்பிறகு நேற்று இரவு கோவை புதூர் பகுதியில் ஆர்எஸ்எஸின் கிளை அமைப்பான சமஸ்கிருத பாரதி அமைப்பின் தமிழக-கேரள கேந்திர பொறுப்பாளரான ஆனந்த கல்யாண கிருஷ்ணன் என்பவரின் வீட்டிலும் நேற்று இரவு பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இதுதொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஒவ்வொரு சம்பவம் தொடர்பாகவும் 3 தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காடேஸ்வரா சுப்பிரமணியம்
இந்நிலையில் கோவை காட்டூர் பகுதியில் இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கோவையில் நடைபெற்ற பெட்ரோல் குண்டு வீச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்தார். மேலும் போலீசார். உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் னெ்றும் வலியுறுத்தினார். இதுபற்றி அவர் கூறியதாவது: கோவையில் மிகப்பெரிய கலவரத்துக்கு திட்டமிட்டுள்ளதாகவும், பல கோடி ரூபாய் பணம் சென்றதாலும் தான் என்ஐஏ சோதனை நடந்துள்ளது. பயங்கர வாத செயல்கள் அவர்கள் செய்தது நிரூபிக்கப்பட்டதன் காரணமாக தான் என்ஐஏ சோதனை செய்துள்ளது.அதற்கான ஆதாரங்களையும் எடுத்துள்ளனர்.
மிகப்பெரிய போராட்டம்
மேலும் தமிழகத்தில் திமுக மூன்று குழுவாக பிரிந்துள்ளது. ஆ ராசா பேச்சு குறித்து அவரிடம் கேள்வி கேட்டால் கட்சி பிளவுபடும் என்பதால் முதல்வர் ஸ்டாலின் மவுனமாக உள்ளார். பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தில் காவல்துறை நடவடிக்கை எடுக்காவிட்டால் மிகப்பெரிய போராட்டம் நடைபெறும்'' என்றார்.