கோவை அருகே ஆணவ படுகொலை... ஜாதி மாறி திருமணம் செய்ததால் காதலன் குடும்பத்தினர் வெறிச்செயல்
Recommended Video
கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் காதல் திருமணம் செய்து கொண்ட ஜோடிக்கு சரமாரி அரிவாள் வெட்டு விழுந்தது. இதில், காதலன் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார். ஜாதி மாறி திருமணம் செய்ததால் காதலன் குடும்பத்தினர் வெறிச்செயலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேட்டுப்பாளையம் ஸ்ரீரங்கராயன் ஓடை பகுதியினை சேர்ந்த கனகன் என்ற இளைஞர் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த வர்ஷினி பிரியா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்ததற்காக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
கனகன்(21) , வர்ஷினி பிரியா(18) இருவரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், பெற்றோரின் கடும் எதிர்பை மீறி சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டனர். திருமணம் செய்த அன்றே புதுமண தம்பதியர் அரிவாளால் கொடூரமாகத் தாக்கப்பட்டுள்ளனர்.
காதல் விவகாரத்தில் ஆத்திரத்தில் இருந்த கனகனின் சகோதரர், இன்று மாலை இருவரையும் சரமாரியாக அரிவாளால் வெட்டி உள்ளார். இதில், காதலன் கனகன் ரத்த வெள்ளத்தில் சரிந்து, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காதலி வர்ஷினி பிரியா உயிருக்கு ஆபத்தான நிலையில் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பதற்றம் நிலவுவதால், போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் மேலும் ஒரு சாதி ஆணவ படுகொலை நடந்துள்ள சம்பவம், பலத்த அதிர்வலைகளை உண்டாக்கியுள்ளது.
இந்த சாதி ஆணவப்படுகொலை திட்டமிட்டே நிகழ்த்தப்பட்டது எனவும், முன்பே கனகனும் - வர்ஷினி பிரியாவும் திருமணம் செய்துகொண்டால் வெட்டி ஆற்றில் வீசுவோம் என கனகனின் பெற்றோர் கொலை மிரட்டல் விடுத்ததாக. வர்ஷினி பிரியாவின் பெற்றோர் கண்ணீர் மல்க கூறினர்.