இரட்டை பாதிப்பில் இரும்பாலை தொழில்.. தடுமாறும் கோவை.. தாங்கி பிடிக்குமா அரசு?
கோவை: இரும்பு எஃக்கு உருக்காலைகளுக்கு பெயர்பெற்ற கோவை (தென் இந்தியாவின் மான்செஸ்டர்) தற்போது தொழிலாளர்கள் இன்றியும், போதிய தேவை இன்றியும் தடுமாறி வருகிறது.
Recommended Video
கோவை மாநகர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில், சுமார் 600 , இரும்பு, எஃக்கு, அலுமினியம் உருக்காலைகள் செயல்பட்டு வருகின்றன. இந்தியாவின் மொத்த உருக்காலை தொழிலில் 10 சதவீத பங்களிப்பை கோவை கொடுத்து வருகிறது.
வந்தாரை வாழவைத்த கோவைக்கு இப்போது சோதனை காலம். தொழிலாளர் பற்றாக்குறை மற்றும் தேவையில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி, ஆகிய இரு பக்கங்களில் இருந்து அடி வாங்க கூடிய தவில் நிலைமை போல கோவை தொழில்கள் மாறியுள்ளன.
கோவை நிலவரம்
கோவை பகுதியில் உள்ள 600 உருக்காலைகள் மூலமாக ஒரு மாதத்துக்கு சுமார் ஒரு லட்சம் டன் வார்ப்புகள் உருவாக்கப்பட்டு வந்தன, இதன் மதிப்பு வருடத்திற்கு சுமார் ரூ.13000 கோடி வரை இருக்கும். ஆனால், இப்போது அங்கு நிலைமை எப்படி இருக்கிறது என்பது பற்றி சில தொழிலதிபர்கள் தங்கள் அனுபவத்தை பகிர்ந்து உள்ளனர்.
கோவை இரும்பு ஆலைகள்
ஆர்எஸ்எம் ஆட்டோ காஸ்ட் லிமிடெட் நிறுவனத்தின் மேலாண் இயக்குனர், இளங்கோ, ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், மார்ச் 22ம் தேதி லாக்டவுன் துவங்கியது. ஆனால் அதற்கு முன்பே 6 மாதங்களாக நாங்கள் மொத்த கொள்ளளவில் 70 முதல் 75 சதவீதம் அளவுக்கு தான் செயல்பட்டு வந்தோம். மார்ச் மாதம் எங்கள் உற்பத்தி, 50 சதவீதமாக குறைந்தது ஏப்ரல் மாதம் பூஜ்ஜியம் என்ற அளவுக்குச் சென்றது. மே மாதம் 5 முதல் 10 சதவீதம் அளவுக்கான உற்பத்தியைதான் நடத்த முடிந்தது. ஜூன் மாதம் அது அதிகபட்சமாக 25 சதவீதம் வரை செல்லக்கூடும் அவ்வளவுதான் என்றார். இவர் நிறுவனம் ஒரு மாதத்திற்கு 2 ஆயிரம் டன் அளவுக்கு வார்ப்புகள் உற்பத்தி கொள்ளளவு கொண்ட நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.
வாகனங்களின் உதிரிபாகங்கள்
கோவையில் தயாரிக்கப்படும் கூடிய இந்த இரும்பு, எஃக்கு வார்ப்புகள், ஆட்டோமொபைல் தொழில்கள், டிராக்டர் உதிரிபாகங்கள், மோட்டார் பம்புகள், மற்றும் வால்வுகள் டெக்ஸ்டைல் இயந்திரங்கள், ஏர் கம்ப்ரசர் மற்றும் லேத்து பட்டறைகளுக்கு சப்ளை செய்யப்படுவது வழக்கம். இதுபற்றி மேலும் அவர், கூறுகையில், டெக்ஸ்டைல் இயந்திரங்கள், வணிக வாகனங்கள், பயணிகள் கார் போன்றவற்றின் விற்பனை கடந்த ஒரு ஆண்டாகவே குறைந்துள்ளது. அந்த நிலைமை இப்போது இன்னும் மோசமாகி விட்டது என்கிறார். இவரது நிறுவனம் அசோக் லேலண்ட் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு பிரேக் டிரம்கள் போன்றவற்றை சப்ளை செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
டிராக்டர்கள் தேவை உயர்வு
சக்தி, ஆட்டோ உதிரி பாகங்கள் நிறுவனத்தின் சேர்மன், மாணிக்கம் இதுகுறித்துக் கூறுகையில், இப்போது ஏற்பட்டுள்ள பிரச்சினை என்பது பொருட்களுக்கான தேவை குறைந்துள்ளது என்பதுதான். மழை காரணமாக விவசாய நடவடிக்கைகள் அதிகரித்துள்ளதால் இப்போதுதான் டிராக்டர்கள் பம்பு செட்டுகள் போன்றவற்றுக்கான தேவை அதிகரித்து வருவதை பார்க்க முடிகிறது. எனவே அதற்கு உள்ளீடாக கொடுக்கக்கூடிய இரும்பு ஆலைகளும், கொஞ்சம் கொஞ்சமாக தங்கள் உற்பத்தியை அதிகரிக்கும் என்று நம்புகிறோம். அதேநேரம் அனைத்து துறைகளிலும் தேவை அதிகரிக்காத வரை இது மிகப்பெரிய உற்பத்தி வாய்ப்பை வழங்காது.
கோவையிலிருந்து கிளம்பிய புலம்பெயர் தொழிலாளர்கள்
எங்கள் நிறுவனத்தில், மார்ச் மாதம் 6 ஆயிரம் டன்கள் உற்பத்தி செய்தோம். ஏப்ரல் மாதம் உற்பத்தி கிடையாது. இந்த மாதம் அதிகமாக 800 முதல் 1000 டன்கள் வரை உற்பத்தி செய்வோம் என்று எதிர்பார்க்கிறோம் என்கிறார் மாணிக்கம். தேவைகள் குறைந்து இருப்பது மட்டுமின்றி புலம்பெயர் தொழிலாளர்கள் கோவையை விட்டு கிளம்பிச் சென்றதும் இந்த தொழில் நிறுவனங்களுக்கு மற்றொரு தலைவலியாக உருவாகியுள்ளது. இதுபோன்ற உருக்காலைகள் ஒவ்வொன்றும் சராசரியாக 200 முதல் 300 பேருக்கு வேலைவாய்ப்பை வழங்கி வந்தன. இதுபோக துணை தொழில் நிறுவனங்கள் என்று அழைக்கக்கூடிய மெஷின் கடைகள் உள்ளிட்டவற்றையும் சேர்த்தால் இந்த இரும்பு ஆலைகள் மூலமாக சுமார் 2 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. இதில் புலம்பெயர் தொழிலாளர்கள் 60% வரை இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தொழிலாளர்களுக்கு உணவு வசதி
லாக்டவுன் காலகட்டத்திலும், தொழிலாளர்களுக்கு உணவு, இருப்பிட வசதி மற்றும் மாதம் சுமார் 2000 ரூபாய் வழங்கி உள்ளனர் இந்த தொழிலதிபர்கள். அப்படியும், சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டதும், அவர்கள் தங்கள் சொந்த மாநிலங்களை நோக்கி இடம்பெயர்ந்து விட்டதாக பலரும் ஆதங்கம் தெரிவிக்கிறார்கள். 1920களில் கோவையில் உருக்காலை தொழில்கள் ஆரம்பமானது. குறிப்பாக விவசாய பம்பு செட்டுகள் மற்றும் ஜவுளி நிறுவனத்திற்கான இயந்திரங்கள் போன்றவற்றை சப்ளை செய்வதற்காக இவை உருவாக்கப்பட்டன.
தொழிலை மீட்டெடுக்க அரசு உதவி தேவை
லட்சுமி மெஷின் ஒர்க்ஸ், எல்கி எக்யூப்மென்ட்ஸ், பம்புசெட் தயாரிப்பாளர்களான, சிஆர்ஐ பம்ப்ஸ் மற்றும் டெக்ஸ்மோ போன்றவை அவர்களுக்காகவே சொந்தமாக வார்ப்பாலைகளை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்து குஜராத்திலுள்ள ராஜ்கோட், மகாராஷ்டிராவின் கோலாப்பூர் கர்நாடகாவில் பெல்காம், பஞ்சாப் மாநிலத்தில் ஜலந்தர் உள்ளிட்டவை இதுபோன்ற உருக்காலைகளுக்கு பெயர்பெற்ற நகரங்களாகும். சீனாவுக்கு அடுத்தபடியாக உலகத்திலேயே இரண்டாவது பெரிய அதிகப்படியாக உருக்காலைகள் உற்பத்தி கொண்ட நாடு இந்தியாதான். எனவே இந்த தொழிலை மீட்டெடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுக்க வேண்டும் என்பது இத்துறை சார்ந்த கோரிக்கையாக இருக்கிறது.