நடப்பது ஜெயலலிதா ஆட்சியா... மக்களை ஏமாற்றுகிறார் பழனிசாமி... டிடிவி காட்டம்
சூலூர்: ஜெயலலிதா ஆட்சி என்று கூறி எடப்பாடி பழனிசாமி மக்களை ஏமாற்றி வருகிறார் என அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
திமுகவுடன் சேர்ந்து ஆட்சியை கலைப்போம் என்ற அளவிற்கு, அமமுகவைச் சேர்ந்த தங்க தமிழ்ச்செல்வன் பேசினார். இதற்கு, அவர் பேசியது யதார்தமானது என்று டிடிவி பதிலளித்தார்.
இந்தநிலையில், சூலூர் சட்டமன்ற தொகுதியில் டி.டி.வி.தினகரன் 2-வது நாளாக பிரச்சாரம் நேற்று செய்தார். அவர் கள்ளப்பாளையம், சின்னக்குயிலி, இடையர்பாளையம், அக்கநாயக்கன்பாளையம், வடவள்ளி, செஞ்சேரிமலை, ஜல்லிப்பட்டி உள்பட பல்வேறு பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார்.
இப்படி கூட வழி உள்ளதா? ஸ்லீப்பர் செல்களை களமிறக்கும் டிடிவி தினகரன்.. அமமுக புது வியூகம்!
துரோக ஆட்சி
அப்போது அவர் பேசியதாவது: ஜெயலலிதா மறைவுக்கு பிறகு இந்த ஆட்சியை தொடர்ந்து நடத்திட வேண்டி சசிகலா சிறைக்கு செல்வதற்கு முன்பு, எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக்கினார் என்றார்.
பதில் அளிக்க வேண்டும்
ஆனால், இந்த கட்சி எக்கேடு கெட்டு போனால் என்ன என்று சசிகலா நினைத்திருந்தால் பழனிசாமி முதலமைச்சர் என்று மார்தட்டிக் கொண்டிருக்க முடியாது என்றும் பேசினார். பழனிசாமியை ஒரு சகோதரராக நினைத்து சசிகலா ஆட்சியை விட்டு சென்றார். ஆனால் அவர் துரோகம் செய்து விட்டார். அவர் செய்தது சரியா என்பதற்கு வாக்காளர்களாகிய நீங்கள் தான் இந்த தேர்தல் மூலம் பதில் அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
மோடியின் ஏஜெண்டு
மோடியின் ஏஜெண்டாக செயல்படும் இவர்கள் ஜெயலலிதா எந்தெந்த திட்டங்களையெல்லாம் எதிர்த்தாரோ அதையெல்லாம் ஆதரிக்கிறார்கள் என்று கூறிய டிடிவி தினகரன், நீட் தேர்வு வேண்டாம் என்று ஜெயலலிதா போராடினார். ஆனால் பழனிசாமி அதை ஆதரிக்கிறார் என்றும் மோடிக்கு பயந்து கொண்டு விவசாயிகளை பாதிக்கிற திட்டங்களை கொண்டு வருகிறார்கள் எனவும் தெரிவித்தார்.
பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை
மேலும், ஜெயலலிதா ஆட்சி என்று கூறி பழனிசாமி மக்களை ஏமாற்றி வருகிறார். அவர் இரட்டை இலையை காட்டி ஏமாற்றுகிறார். இதை மக்கள் புரிந்து கொண்டுள்ளனர். ஜெயலலிதாவின் பெயரை சொல்லி ஆட்சிக்கு வந்த பழனிசாமியின் ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும் குற்றம்சாட்டினார்.
துரோக கூட்டணி
ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அவருடைய உருவப்படத்தை சட்டமன்றத்தில் வைக்கக்கூடாது என்று கூறிய விஜயகாந்த் கட்சியுடன், கூட்டணி வைத்துள்ளனர். ஜெயலலிதாவிற்கு நினைவு மண்டபம் கட்டக்கூடாது என்று நீதிமன்றம் வரை சென்ற பாட்டாளி மக்கள் கட்சியுடன் கூட்டு வைத்துள்ளனர். துரோகம் செய்தவர்கள் எப்படி மக்கள் நலனில் அக்கறை செலுத்துவார்கள் என்றும் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பினார்.