ஜாக்டோ ஜியோ ஸ்டிரைக்.. கோவையில் ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்கள் கைது
கோவை: 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மூன்றாவது நாளாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஜாக்டோ ஜியோ அமைப்பினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 3000க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்..
புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் , 21 மாத நிலுவை தொகையினை வழங்க வேண்டும் , இடைநிலை ஆசிரியர்களை எல்கேஜி, யுகேஜி வகுப்புகளுக்கு பணி அமர்த்த கூடாது என்பன உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் தமிழகம் முழுவதும் மூன்றாவது நாளாக காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த போராட்டத்தின் ஒரு பகுதியாக கோவை மாவட்டம் முழுவதும் இருந்து ஜாக்டோ ஜியோ அமைப்பினர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக குவிந்தனர்.இதன் காரணமாக அப்பபகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.இதனையடுத்து போக்குவரத்து வேறு பாதையில் திருப்பிவிடப்பட்டது.
நீதிமன்றம் சொல்லட்டும்!
ஜாக்டோ ஜியோ அமைப்பினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக மறியலில் ஈடுபட்டனர். அப்போது தமிழக அரசு உடனடியாக ஜாக்டோ ஜியோ அமைப்பின் நிர்வாகிகளை அழைத்து பேச வேண்டும் என வலியுறுத்தினர். தங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் எனவும் தெரிவித்த அவர்கள் அரசு வேலைக்கு திரும்ப வேண்டும் என்று உத்தரவிட்டதே தவிர போராட்டத்தைக் கைவிட வேண்டும் என்று உத்தரவிடவில்லை.எனவே போராட்டம் தொடரும் எனவும் ஆசிரியைகள் தெரிவித்துள்ளனர்.
கோவை ஸ்தம்பித்தது!
ஆட்சியர் அலுவலகம் முன்பு மறியல் போராட்டத்தில் கோவை, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், கிணத்துகடவு, அன்னூர் உட்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 3000 க்கும் மேற்பட்ட ஜாக்டோ ஜியோ அமைப்பினர் கலந்து கொண்டனர்.இதனையடுத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள் அனைவரையும் காவல் துறையினர் கைது செய்தனர்.
செல்ஃபி ஆசிரியர்கள்
போராட்டத்தில் கலந்துகொண்ட பெரும்பாலானோர் தங்களது செல்போனில் செல்பி எடுப்பதிலேயே மும்முரம் காட்டினர். மேலும் இப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சிஐடியு தொழிற்சங்கத்தினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மாணவர்களும்
இதேபோல் கோவை அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் ஆசிரியர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கல்லூரி வாயிலில் முன்பாக ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் போராட்டத்திற்கு ஆதரவாக கோஷங்கள் எழுப்பினர். இந்த தொடர் போராட்டங்களால் கோவையில் பரபரப்பு காணப்பட்டது.