"டிப்டாப்" மோகனா.. அதிர வைத்த அம்மாசை கொலை.. கிடுக்கிப் பிடி தீர்ப்பளித்த கோவை கோர்ட்!
பெண்ணை கொன்ற வழக்கில் இன்று தம்பதிக்கு தண்டனை அளிக்கப்படுகிறது
கோவை: கோவையில், 9 வருஷத்துக்கு முன்பு, பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.. அந்த வகையில், தம்பதி உட்பட 3 பேர் குற்றவாளிகள் என்று கோர்ட் தெரிவித்துள்ளது.
கோவை, சிவானந்தா காலனியை சேர்ந்தவர் மாரிமுத்து... இவரது மனைவி அம்மாசை.. இவருக்கு 45 வயது! கணவன் மனைவிக்குள் சொத்து விற்பது தொடர்பாக தகராறு வரவும், 2 பேரும் பிரிந்து வாழ்ந்தனர்.
இது சம்பந்தமான பிரச்சனையும் கோர்ட்டுக்கு சென்றால் தீரும் என்பதால், வழக்கு தொடுப்பது தொடர்பாக, வக்கீல் ராஜவேல் என்பவரை சந்திக்க சென்றார் அம்மாசை.
கோபாலபுரம்
அந்த வக்கீல் ஆபீஸ் கோபாலபுரத்தில் உள்ளது.. கடந்த 2011, டிசம்பர் 11ம் தேதி அங்கு சென்றார் அம்மாசை.. ஆனால், அன்று முழுவதும் வீடு திரும்பவில்லை.. இதனால் பயந்துபோன, அவரது மகள் சகுந்தலாதேவி, ரத்னபுரி போலீசில் புகார் தந்தார்.. போலீசாரும் அம்மாசையை தேட ஆரம்பித்தனர்.. அப்போது ராஜவேல் ஆபீசில் சென்று பார்த்தால், அம்மாசை பிணமாக கிடந்தார்.
கொலை
அவரது கழுத்தை நெரித்து கொன்றிருந்தனர். இதையடுத்து போலீசார், அந்த கொலைக்கான காரணம் என்ன என்று விசாரித்தனர். அப்போதுதான், மோகனா என்ற பெண்ணின் பெயர் அடிபட்டது. மோகனாவுக்கு 47 வயது. ராஜவேல் மனைவிதான் மோகனா.. இவரும் வக்கீல்.. ஒடிசாவில் நிதி நிறுவனம் நடத்தி, அங்கு மோசடி செய்தவர்.. அது சம்பந்தமாக போலீசாரும் மோகனாவை தேடி கொண்டிருந்தனர்.
சான்றிதழ்
ஆனால், போலீசிடம் சிக்காமல் இருக்க என்ன வழி என்று மோகனா யோசித்து கொண்டிருக்கும்போதுதான், அம்மாசை அங்கு வந்தார். அப்போதுதான் அந்த விபரீத ஐடியா அவருக்கு வந்தது.. தன் மீதான வழக்கை முடித்து வைக்க, தானே இறந்து விட்டதாக சான்றிதழ் கொடுக்க மோகனா கணவனுடன் சேர்ந்து பிளான் செய்தார்..
சுடுகாடு
தன் சொத்து சம்பந்தமாக எப்படி வழக்கு தொடுப்பது என்று கேட்க வந்த அம்மாசையை கொலை செய்தனர் இந்த தம்பதியினர்.. பிறகு, இறந்தது மோகனா என்று சொல்லி டாக்டர் சர்டிபிகேட் ஒன்றையும் தயார் செய்துவிட்டனர்.. அதற்குள் அம்மாசையின் சடலத்தை சுடுகாட்டில் போய் எரித்தும் விட்டனர். அதற்கு மாநகராட்சியிலும் ஒரு சர்டிபிகேட் வாங்கி கொண்டனர்.
குற்றவாளிகள்
இவ்வளவும் போலீஸ் விசாரணையில் தெரியவந்ததையடுத்து, இது தொடர்பாக, வக்கீல் ராஜவேலு, மோகனா, உடந்தையாக இருந்த பொன்ராஜ், டிரைவர் பழனிச்சாமி ஆகியோர், 2013ல் கைது செய்யப்பட்டனர்.. இந்த வழக்கில் பொன்ராஜ் அப்ரூவராக மாறியதால், அவர் அரசு தரப்பு சாட்சியாக சேர்க்கப்பட்டார்... இதனால் மற்ற 3 பேர் மீதும், கடந்த 6 வருஷமாக விசாரணை நடந்து வந்தது.
தண்டனை
அதன்பேரில் தற்போது தீர்ப்பும் அளிக்கப்பட்டுள்ளது. அதில், ராஜவேலு, மோகனா, பழனிச்சாமி ஆகிய 3 பேரும் குற்றவாளி என கோர்ட் தீர்ப்பளித்தது.. இது சம்பந்தமான தண்டனை விவரம் இன்னும் சிறிது நேரத்தில் வெளியாகும் என்றும் தெரிகிறது.