கோவை சிறையிலிருந்து கேசி பழனிச்சாமி விடுதலை.. நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்தார்!
கோவை: அதிமுக பெயரில் போலி இணையதளம் நடத்தியதாக கைது செய்யப்பட்ட கேசி பழனிச்சாமி நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்தார். அதிமுக பெயரில் போலி இணையதளம் நடத்தி வந்ததாக கடந்த ஜனவரி 25-ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.
மத்திய அரசுக்கு எதிராக செயல்பட்டதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் ஆகியோர் இணைந்து முன்னாள் எம்பி கேசி பழனிச்சாமியை கட்சியிலிருந்து நீக்கினர்.
இவர் அதிமுகவிலிருந்து நீக்கிய பிறகும் போலி இணையதளம் ஒன்றை துவக்கி அதில் அதிமுக குறித்து பதிவிட்டு வந்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
3 ராஜ்ய சபா எம்பி சீட்டு.. அதிமுகவில் இப்போதே கடும் போட்டி.. தேமுதிகவும் மல்லுகட்டுது!
விசாரணை
இவரது இணையதளத்திலும் லெட்டர் பேடிலும் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்தியிருந்தார். இந்நிலையில் நேற்று முட்டுகவுண்டன் புதூர் ஊராட்சி மன்ற தலைவர் கந்தவேல் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த சூலூர் போலீஸார் ஜனவரி மாதம் 25-ஆம் தேதி காலை 4 மணி அளவில் கோவை ஆர் எஸ் புரம் பகுதியில் உள்ள கே சி பழனிச்சாமியை அவரது வீட்டில் வைத்து விசாரணை நடத்தினர்.
விசாரணை
இதையடுத்து அவரை கைது செய்தனர். அவர் கோவை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி வேடியப்பனின் வீட்டுக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவரை கோவை சிறையில் வைக்க உத்தரவிடப்பட்டது. இந்த நிலையில் ஜாமீன் கோரி கோவை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி சக்திவேல் முன்பு விசாரணைக்கு வந்தது.
நிபந்தனை ஜாமீன்
அப்போது கேசி பழனிச்சாமிக்கு நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கப்பட்டது. அவர் சூலூர் காவல் நிலையத்தில் தினமும் காலையும் மாலையும் ஆஜராகி கையெழுத்திட உத்தரவிடப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் கோவை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார்.
போலீஸிடம் கோபம்
முன்னதாக கைது செய்யப்பட்ட அவர் செய்தியாளர்களிடம் பேசுவதற்கு போலீஸார் அனுமதி அளிக்கவில்லை. அவரை அணைத்தப்படி தள்ளிக் கொண்டே சென்றதால் கேசி பழனிச்சாமி கோபமடைந்தார். இதனால் கேசி பழனிச்சாமியை போலீஸார் இறுக்கி பிடித்து வேனில் தள்ளினர். பின்னர் உள்ளே போங்க என கூறியதால் கோபமடைந்த அவர் கையை எடுடா என கோபமாக கூறியது குறிப்பிடத்தக்கது.