அதிமுகவிலிருந்து நீக்கியதாக எனக்கு கடிதம் வரவில்லை.. நான் அதிமுகதான்- கே.சி. பழனிச்சாமி
கோவை: அதிமுகவிலிருந்து நீக்கியதாக எனக்கு கடிதம் வரவில்லை. நான் அதிமுகதான் என முன்னாள் எம்பி கேசி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
அதிமுகவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான கே சி பழனிச்சாமி கோவையிலுள்ள லாலிரோட்டில் வசித்து வருகிறார். கோவையில் பல்வேறு தொழில் நிறுவனங்கள் மற்றும் கல்லூரிகள் ஆகியவற்றை நடத்தி வரும் இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார்.
கடந்த மார்ச் மாதம் தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் பங்கேற்ற கே சி பழனிச்சாமி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என கோரினார். அவ்வாறு அமைக்கவில்லை என்றால் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களே அதிமுகவுக்கு எதிராக வாக்களிப்பார்கள் என கூறினார்.
போலி பெயர்
இதையடுத்து அவர் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டார். அவ்வாறு நீக்கப்பட்ட போதிலும் அவர் அதிமுகவின் பெயரில் போலி இணையதளத்தை பயன்படுத்தி வந்தார். அதிமுகவின் லெட்டர் பேடையும் அவர் பயன்படுத்தியுள்ளார். இதனிடையே தான் அதிமுகவில் மீண்டும் சேர்ந்து விட்டதாகவும் கூறியிருந்தார்.
கைது
ஆனால் அதை எடப்பாடி பழனிச்சாமி சேலம் வந்திருந்த போது மறுத்தார். மேலும் அவர் கூறுகையில் கேசி பழனிச்சாமியை அதிமுகவில் இணைத்து கொண்டதாக நாங்கள் கூறினோமா என கேட்டிருந்தார். இந்த நிலையில் அதிமுக பெயரை சட்டவிரோதமாக அவர் பயன்படுத்துவதாக புகார் எழுந்தது. அந்த புகாரின் பேரில் கோவையில் லாலி ரோட்டில் உள்ள அவரது வீட்டில் போலீஸார் விசாரணை நடத்தி அவரை ஜனவரி 25-ஆம் தேதி கைது செய்தனர்.
முதல்வர்
இந்த நிலையில் அவர் நிபந்தனை ஜாமீனில் இன்று விடுதலை செய்யப்பட்டார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில் கட்சியிலிருந்து நீக்கியதாக எனக்கு அதிமுகவிலிருந்து கடிதம் வரவில்லை. என்னை சிறை வைத்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
100 முறை சிறை
சிறைக்கு சென்றதன் மூலம் இன்னும் நான் உறுதியாக இருப்பேன். 100 முறை வைத்தாலும் நான் அதிமுகதான். வேறு எந்த கட்சிக்கும் செல்ல மாட்டேன். அந்த பேச்சுக்கே இடமில்லை. முன்பை விட உத்வேகத்துடன் வழக்குகளை நடத்துவேன் என கேசி பழனிச்சாமி ஆக்ரோஷமாக பேட்டி கொடுத்துள்ளார். அவரது அடுத்த செயல்பாடுகள் எப்படி இருக்கும் என்பது அவரது பேட்டியிலேயே தெரிகிறது.