கருங்கோழியில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம்... கிலோ ரூ.400-க்கு விற்ற கறி ரூ.900 வரை கிடுகிடு உயர்வு
கோவை: கருங்கோழியில் மருத்துவ குணம் உள்ளதால் அதன் விற்பனை முன்பைக் காட்டிலும் பல மடங்கு அதிகரித்துள்ளது.
கடக்நாத் எனப்படும் கருங்கோழி இறைச்சிக்கு ஆஸ்துமா, மூச்சிரைப்பு, உள்ளிட்ட வியாதிகளை குணப்படுத்தும் ஆற்றல் உள்ளதாலும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் இருப்பதாலும் இதனை மக்கள் அதிகம் வாங்கத் தொடங்கியுள்ளனர்.
இதன் காரணமாக கருங்கோழி கறி விலை கிலோ ரூ.400 -ல் இருந்து கிடுகிடுவென உயர்ந்து ரூ.900 வரை விற்பனை செய்யப்படுகிறது.
லடாக்.. அடுத்த லெவல் மீட்டிங்.. இந்தியா - சீனா ராணுவம் இடையே எல்லையில் இன்று முக்கிய பேச்சுவார்த்தை!
காட்டுக்கோழி
கருங்கோழி எனப்படும் கடக்நாத் வகை கோழிகள் காட்டுக்கோழி இனத்தை சேர்ந்தது. உத்திரப்பிரதேசம், ஜார்கண்ட், மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் பழங்குடியின மக்களால் வளர்க்கப்பட்டு வந்த இந்த வகை கோழிகளை சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழக விவசாயிகளும் வளர்க்கத் தொடங்கினர். அதுவும் ஒரு சிலர் கருங்கோழி பண்ணைகள் தனியாக அமைத்து அதில் நல்ல லாபம் ஈட்டி வருகின்றனர். கருங்கோழி கறிக்கு இப்போது மவுசு ஏற்பட்டுள்ளது.
விலை அதிகம்
இதற்கு காரணம் இந்தக் கோழிக்கறியில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் இருப்பது தான். அதுமட்டுமல்லாமல் சுவாசப்பிரச்சனை, ஆஸ்துமா உள்ளிட்ட வியாதிகளுக்கு குணமளிக்கக் கூடிய ஆற்றலும் தன்மையும் இந்த கறிக்கு உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தொடக்கத்தில் கருங்கோழி இறைச்சியை வாங்க தயங்கிய மக்கள் இப்போது என்ன விலை கொடுத்தேனும் இந்தக் கோழிக்கறியை வாங்க ஆர்வம் காட்டுகின்றனர்.
ஒரு முட்டை ரூ.25
கருங்கோழி முட்டையின் விலை ரூ.25 வரை விற்பனை செய்யப்படுகிறது. இதனை முன் கூட்டியே சொல்லி வைத்து பலரும் வாங்கிச் செல்கின்றனர். காரணம் அந்தளவிற்கு இதற்கு கடும் கிராக்கி நிலவுவதே ஆகும். மக்களிடம் இது குறித்து ஏற்பட்டுள்ள விழிப்புணர்வு காரணமாக கருங்கோழி வளர்ப்பில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். மேலும், பலரும் இப்போது கருங்கோழி வளர்ப்பில் ஈடுபட ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளனர்.
பிராய்லர் கோழி
பிராய்லர் கோழிக்கறியை விட கருங்கோழி கறியில் அதிகச் சத்து நிறைந்துள்ளதாகவும், இயற்கையான முறையிலேயே இந்தச் சத்துக்கள் உள்ளதால் எந்தவித ஊசியோ, மருந்தோ கொடுப்பதில்லை என்கின்றனர் கருங்கோழி வளர்ப்பு விவசாயிகள். தற்போது கொரோனா அச்சம் மக்களை ஆட்டிப்படைத்து வரும் நிலையில், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக்கொள்ள பலரும் கருங்கோழி கறியை நாடத்தொடங்கியுள்ளனர்.