மக்கள் நீதி மய்யம் தொடங்கியது ஏன்? - 8 சம்பவங்களை பட்டியலிட்ட அதிரடியாக கமல்ஹாசன்
Recommended Video
கோவை: மக்கள் நீதி மய்யம் கட்சியை தொடங்கியது ஏன் என அதன் தலைவர் கமல்ஹாசன் விளக்கினார்.
கோவையில் மக்கள் நீதி மய்யம் சார்பில் நடந்த பொதுக் கூட்டத்தில் கமல்ஹாசன் கலந்து கொண்டு அவர் பேசுகையில், நான் இந்த கட்சியை தொடங்கியதற்கான காரணமும், அந்த கொடி அங்கே பறப்பதற்கு காரணம் இந்த 8 சம்பவங்கள்தான்.
அவை
நவ 8 - பணமதிப்பிழப்பை கொண்டு வந்து முதுகெலும்பை உடைத்தார்கள். வாழ்வாதாரத்தை அழித்தார்கள், ஏழைகளை பேங்க் , ஏடிஎம் வாசல்களில் நிற்க வைத்தார்கள்.
ஜன 23, 2017- இளைஞர்கள் தென்னெழுச்சியாக நடத்திய ஜல்லிக்கட்டு போராட்டத்தில் மாவோயிஸ்ட்கள் கலந்துவிட்டதாக கூறி மாணவனையும் மீனவனையும் காவல் துறை அடித்து அந்த போராட்டத்துக்கு கருப்பு சாயம் பூசியது.
பிப் 5- கூவத்தூரில் 122 அதிமுக எம்எல்ஏக்களை சிறைபிடித்து இந்த பார்முலாவை அனைவரும் வாசித்த நாள்.
ஏப் 22- விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்ய கோரி டெல்லியில் விவசாயிகள் போராட்டம் செய்து கடைசியில் கோவணத்துடன் ஊர் திரும்பினர்.
செப் 1- நீட் தேர்வால் மருத்துவ கனவு பாழாகியதால் அரியலூர் அனிதா தற்கொலை
செப் 5- ஆர்எஸ்எஸ், பாஜகவுக்கு எதிராக எழுதிய எழுத்தாளர் கவுரி லங்கேஷ் சுட்டுக் கொல்லப்பட்டார்.
செப் 25- எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவுக்கு முறைகேடாக பேனர் வைத்து அந்த பேனர் கோவை அவினாசி சாலையில் ரகுநாத் என்பவர் மீது விழுந்து அவர் பலியானார். ஆனால் அரசோ அந்த பழியை லாரி டிரைவர் மீது போட்டது.
மே 22 2018- சுத்தமான காற்று வேண்டும் என 100 நாட்களுக்கு மேல் போராடிய தூத்துக்குடி மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தி 13 பேர் பலியாகினர். கார்ப்பரேட்டுகளுக்கு ரத்த கம்பளம் விரித்த நாள்.