என்ன ஒரு கேடித்தனம்.. கேரள தம்பதி செய்த காரியம்.. அதிர்ந்த கோவை!
கோவை: கோவையில் தனியார் நகைக்கடையில் நகை வாங்குவது போல் வந்து, எடுத்து பார்த்த கேரள தம்பதி, நூதன முறையில் தங்க செயினை மாற்றிவிட்டு கவரிங் நகையை வைத்துவிட்டு எஸ்கேப் ஆனது. ஆனால் சிசிடிவி காட்சியால் இப்போது சிறையில் கம்பி எண்ணுகிறார்கள் அந்த கேரள தம்பதி.
கோவை காந்திபுரம் கிராஸ்கட் சாலையில் பவிழம் ஜூவல்லர்ஸ் என்ற பிரபல நகைக் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் சம்பவத்தன்று, கேரள மாநிலம், ஆலப்புழாவை சேர்ந்த சுதீஷ் மற்றும் ஷானி தம்பதியினர் நகை வாங்குவதாக கூறி பவிழம் ஜூவல்லர்ஸ் நகைக் கடைக்குள் நுழைந்து உள்ளனர். அப்போது தங்கச் செயின்களை பார்த்துவிட்டு நாளை வருவதாக விற்பனை பிரதிநிதியிடம் கூறிவிட்டு கடையில் இருந்து வெளியேறினர்.
இதனையடுத்து விற்பனைப் பிரதிநிதி தங்க செயின்களை சரிபார்த்த போது அதில் ஒரு செயின் மட்டும் வித்தியாசமாக இருந்ததை உணர்ந்து கடை மேலாளரிடம் தெரிவித்துள்ளார். அந்த செயினை கடையின் மேலாளர் சோதனை செய்தபோது சுமார் ஒரு லட்சத்து 82 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 32.37 கிராம் எடைகொண்ட தங்கச் செயின் திருடப்பட்டது தெரியவந்தது.
50 குழந்தைகள் நாசம்.. ஆபாச வீடியோ விற்பனை.. உ.பி.யை அதிர வைத்த அரசு இன்ஜினியர்
இதனை அடுத்து கடையின் மேலாளர் உடனடியாக காட்டூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் கடையின் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அப்போது சுதீஷின் மனைவி ஷானி விற்பனைப் பிரிவில் தங்கச் செயின்களை பார்த்துக்கொண்டிருந்த போது தன் கழுத்தில் இருந்த கவரிங் நகை ஒன்றை லாவகமாக மாற்றி வைத்து விட்டு தங்கத்ச் செயினை திருடிச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து அந்த கேரள தம்பதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.