மறுமணம் செய்வதாக ஆசை வார்த்தை.. 7 லட்சம் மோசடி செய்த கேரள இளைஞர் கைது
கோவை: மறுமணம் செய்வதாக ஆசை வார்த்தை காட்டி அந்த பெண்ணிடம் இருந்து ரூ 7 லட்சத்தை மோசடி செய்த கேரள இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.
கோவை மாவட்டத்தைச் சேர்ந்தவர் ரேவதி. இவர் கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்று தனியே வசித்து வந்தார். இந்த நிலையில் ரேவதியின் வாழ்வில் ஒருவர் வந்ததால் அவரது சொல்லொண்ணா துயரத்தை அடைந்துள்ளார்.
ரேவதியின் கல்லூரி நண்பரான கேரளத்தைச் சேர்ந்த ஜிதின்ஷா, 15 ஆண்டுகளுக்கு பிறகு இன்ஸ்டாகிராம் மூலம் நட்பை புதுப்பித்துக் கொண்டார். ரேவதியுடன் நெருங்கி பழக ஆரம்பித்துவிட்டார். இந்த நிலையில் ரேவதியின் தனிமை குறித்து ஜிதின்ஷா தெரிந்து கொண்டார்.
முதலில் மறுப்பு
மேலும் அவருக்கு யாருடைய ஆதரவும் இல்லை என்பதையும் அவர் நன்றாகவே புரிந்து கொண்டார். இதனால் ஒரு கட்டத்தில் தன்னை திருமணம் செய்து கொள்கிறாயா என ஜிதின்ஷா, ரேவதியிடம் கேட்டுள்ளார். அதற்கு முதலில் மறுத்த ரேவதி, பின்னர் பச்சைக் கொடி காட்டிவிட்டார்.
10 லட்சம் தேவை
திருமண முடிவு இருவருக்கும் இடையேயான நெருக்கத்தை மேலும் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் தனக்கு அமெரிக்காவில் வேலை கிடைத்துள்ளதால் அதற்கு ரூ 10 லட்சம் தேவைப்படுகிறது என ரேவதியிடம் ஜிதின்ஷா கூறியுள்ளார்.
ரூ 7 லட்சம்
இந்த பணத்தை செலுத்திவிட்டு நாம் இருவரும் வெளிநாட்டில் சந்தோஷமாக வாழலாம் என்றும் ஆசைவார்த்தை கூறியுள்ளார். இதை நம்பிய ரேவதி, தன்னிடம் இருந்த 7 லட்சம் ரூபாயை ஜிதின்ஷாவிடம் கொடுத்துள்ளார்.
அதிர்ச்சி
இதையடுத்து ரேவதியை முகநூலில் தொடர்பு கொண்ட பெண் ஒருவர் , தான் ஜிதின்ஷாவின் மனைவி என்றும் திருமணம் ஆகவில்லை என கூறி அவர் பல பெண்களை ஏமாற்றியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதனால் ரேவதி அதிர்ச்சி அடைந்தார்.
புகார்
பின்னர் இதுகுறித்து ஜிதின்ஷாவிடம் ரேவதி கேட்டுள்ளார். அப்போது ஏதோ மழுப்பிய ஜிதின்ஷா, நாளடைவில் ரேவதியுடன் பழகுவதையே நிறுத்திக் கொண்டார். இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. துபாய் தப்பி செல்ல முயன்ற இவர் புதன்கிழமை கைது செய்யப்பட்டார்.