கோடநாடு கொலை வழக்கு.. ஜெயலலிதாவின் கார் டிரைவர் கனகராஜின் சகோதரர் கைது
கோவை: கோடநாடு வழக்கு விசாரணை நடைபெற்று வரும் நிலையில் ஜெயலலிதாவின் கார் டிரைவர் கனகராஜ் மர்மமான முறையில் இறந்தார். இந்த வழக்கில் கனகராஜின் சகோதரர் பழனிவேல் கைது செய்யப்பட்டுள்ளார்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கோடநாடு எஸ்டேட் பங்களாவில் 2017 ஏப்ரல் 23 நள்ளிரவில் கொலை, கொள்ளை சம்பவம் நடந்தது. ஓம் பஹதூர் என்ற காவலாளி கொலை செய்யப்பட்டார். மற்றொரு காவலாளி கிருஷ்ணதபா காயமடைந்தார்.
மேலும் கோடநாடு எஸ்டேட் பங்களாவில் இருந்த ஆவணங்கள், பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டன. இந்த வழக்கு தொடர்பாக சயான், வாளையார் மனோஜ், உதயன், மனோஜ் சாமி, ஜித்தின் ஜாய், பிஜின் குட்டி, ஜம்சீர் அலி, தீபு, சதீசன், சந்தோஷ் சாமி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
சசிகலாவுக்கு சம்மன்! நாளை விசாரணைக்கு ஆஜராக உத்தரவு! கோடநாடு கொலை வழக்கில் போலீசார் நடவடிக்கை

ஜெயலலிதாவின் கார் டிரைவர்
இதில் ஜெயலலிதாவின் முன்னாள் கார் டிரைவர் கனகராஜ் 2017 ஏப்ரல் 28ல் விபத்தில் பலியானார். இதனால் இந்த வழக்கு பல மர்ம முடிச்சுகளுடன் தொடர்கிறது. இதனால் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த 5 ஆண்டுகளாக விசாரணை நடைபெற்று வந்தாலும் கூட இன்னும் வழக்கு முடிவுக்கு வரவில்லை.

தனிப்படைகள் விசாரணை
இதனால் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவர்கள் விசாரைணை தீவிரப்படுத்தி உள்ளனர். பல்வேறு கோணங்களில் விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் வழக்கு தொடர்பாக கவுண்டம்பாளையம் தொகுதியின் அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஆறுகுட்டியிடம் சில நாட்களுக்கு முன்பு கோவை பிஆர்எஸ் வளாகத்தில் விசாரணை நடத்தப்பட்டது.

217 பேரிடம் விசாரணை
இதுவரை வழக்கு தொடர்பாக 217 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி உள்ளனர். மேலும் சசிகலாவுக்கும் சம்மன் அனுப்பப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. இதுதவிர முன்னாள் முதல்வரும், அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமியிடமும் விரைவில் விசாரணை நடத்தப்படலாம் என கூறப்படுகிறது.

கனகராஜின் சகோதரர் கைது
இந்நிலையில் தான் ஜெயலலிதாவின் கார் டிரைவர் கனகராஜின் சகோதரர் பழனிவேல் கைது செய்யப்பட்டுள்ளார். கொடநாடு வழக்கில் தொடர்புடைய கனகராஜ் சேலம் ஆத்தூரில் இருசக்கர வாகன்தில் சென்றபோது கார் மோதி மர்மமான முறையில் இறந்தார். இதுதொடர்பாக அவரது மனைவி வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கை திரும்ப பெற வேண்டும் என கனகராஜின் சகோதரர் பழனிவேல் மிரட்டியுள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பான வழக்கில் பழனிவேல் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.