இது என்ன மெட்ராஸா.. இப்ப பேனரை கிழிங்க பார்ப்போம்.. டிராபிக் ராமசாமியை சிறைபிடித்த கோவை பாஜகவினர்
டிராபிக் ராமசாமியை துடியலூர் பாஜகவினர் முற்றுகையிட்டு சிறைபிடித்தனர்
Recommended Video
கோவை: "இது என்ன மெட்ராஸ்-னு நினைச்சிட்டீங்களா? இப்ப பேனரை கிழி பார்ப்போம்.." என்று துடியலூர் பாஜகவினர் டிராபிக் ராமசாமியை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
எங்கெல்லாம் விதிமுறைகளை மீறி பிளக்ஸ் பேனர்கள், கட் அவுட்கள் வைக்கப்பட்டுள்ளதோ அதற்கு எதிராக போராடி வருபவர் டிராபிக் ராமசாமி.
அது மட்டுமில்லை, தமிழ்நாட்டில் எங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டாலும், அதனை உள்ளே நுழைந்து அதை சீர்படுத்துவதுதான் டிராபிக் ராமசாமியின் வழக்கம். அதனால்தான் இந்த டிராபிக் என்ற பெயரே அவருக்கு கிடைத்தது. இவர் தொடுத்த பல பொதுநல மனுக்கள் மீது நீதிமன்றம் நடவடிக்கை எடுத்துள்ளதுடன், இவர்மீது தனி மரியாதையும் வைத்திருக்கிறது.
துடியலூர்
இந்நிலையில், கோவை துடியலூருக்கு இன்று டிராபிக் ராமசாமி வந்தார். பஸ் ஸ்டாண்டில் பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்து பாஜக சார்பில் பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. இதை தவிர்த்து மற்ற கட்சி பேனர்களும் இருந்தன. இதனை பார்த்ததும் டிராபிக் ராமசாமி, டிராபிக் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
மோடிக்கு வாழ்த்து
உடனே போலீசாரும், அங்கு இருந்தவர்களைக் கொண்டு பிளக்ஸ் பேனர்களை அகற்றிக் கொண்டிருந்தனர். அப்போது மோடிக்கு வாழ்த்து தெரிவித்து வைக்கப்பட்டிருந்த பிளக்ஸ் பேனரையும் அகற்றி ஓரத்தில் வைத்தனர்.
சமாதானம்
ஆனால் டிராபிக் ராமசாமி, அந்த பேனரை கிழித்ததாக தெரிகிறது. இதையடுத்து அங்கிருந்த பாஜகவினர் மற்றும் இந்து முன்னணியினர் டிராபிக் ராமசாமியிடம் சண்டைக்கு போய்விட்டனர். போலீசாரும் இதில் தலையிட்டு, இரு தரப்பினரையும் சமாதானப்படுத்த முயன்றனர்.
சிறைபிடிப்பு
உடனே டிராபிக் ராமசாமி தனது காரில் ஏறி புறப்பட்டார். ஆனால் பாஜகவினர் இந்த பிரச்சனையை விடவில்லை. காரில் ஏறிய டிராபிக் ராமசாமியை முற்றுகையிட்டு, அவரை காரோடு சிறைபிடித்தனர். அவர் மீது வழக்கு பதிவு செய்யக்கோரி காவல் துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். "இது என்ன மெட்ராஸ்-னு நினைச்சுட்டாரா? இங்க வந்து எப்படி பேனரை கிழிக்கலாம்.." என்று கூச்சலிட்டனர்.
சாலைமறியல்
இது சம்பந்தமாக பாஜகவினரை போலீசார் சமாதானம் செய்ய முயன்றனர். ஆனால் சில பெண்கள் நடுரோட்டிலேயே உட்கார்ந்து காவல்துறைக்கும், டிராபிக் ராமசாமிக்கும் எதிரான கோஷங்களை எழுப்பினார்கள். மேலும் சாலை மறியலிலும் ஈடுபட முற்பட்டனர்.
பரபரப்பு
தகவலறிந்து பெரியநாயக்கன்பாளையம் துணை காவல் கண்காணிப்பாளர் முற்றுகையில் ஈடுபட்டவர்களிடம் சமரசம் பேசினார். இது சம்பந்தமாக புகார் அளித்தால் நடவடிக்கை எடுப்பதாக உறுதி தந்ததையடுத்து, முற்றுகை கைவிடப்பட்டது. டிராபிக் ராமசாமியையும் அங்கிருந்து அனுப்பி வைத்தார். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.