3 நாளாச்சு.. முடியல.. கோவையில் குடோனுக்குள் புகுந்த 'மாயாஜால' சிறுத்தை.. பரபரப்பில் மக்கள்
கோவை: கோவை குடோனுக்குள் சிக்கி இருக்கும் சிறுத்தையைப் பிடிக்கும் முயற்சியில் மூன்றாவது நாளாக வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
கோயமுத்தூர் மாவட்டம் குனியமுத்தூரை அடுத்துள்ளமதுக்கரை வனப்பகுதியை ஒட்டிய கிராமங்களில் கடந்த சில மாதங்களாக சிறுத்தை நடமாட்டம் அதிகரித்து வந்தது. இதையடுத்து அப்பகுதி மக்கள் வனத்துறையிடம் தகவல் தெரிவித்தனர்.
குனியமுத்தூர் அருகிலிருக்கும் பி.கே.புதூர் பகுதியில் தனியாருக்கு சொந்தமான கழிவறை உபகரணங்கள் இருக்கும் குடோன் உள்ளது. இந்த நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, அங்கு வேலைக்கு சென்ற ஊழியர்கள், குடோனுக்குள் சிறுத்தை இருப்பதைப் பார்த்து பயந்துபோய், குடோன் கதவுகளை மூடிவிட்டு வனத்துறையிடம் தகவல் தெரிவித்தனர்.
தமிழகத்தில் 5 நாட்களுக்குப் பின் கோவில்கள் திறப்பு - பழனியில் சாமி தரிசனம் செய்ய குவிந்த பக்தர்கள்
குடோனில் சிறுத்தை
இதையடுத்து, கோயமுத்தூர் மாவட்ட வன அலுவலர் அசோக்குமார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தார். அவர் தலைமையில் கோவை, மதுக்கரை, போளுவாம்பட்டி உள்ளிட்ட வனச்சரகங்களை சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் குடோனை சுற்றி வளைத்தனர். சிறுத்தை அந்த குடோனை விட்டு வெளியே செல்லாதபடி, குடோனை மூடி, சிறுத்தையைப் பிடிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். குடோனை சுற்றி வலைகளால் மூடியும், கிடங்கின் 3 பகுதிகளிலும் கூண்டு வைத்தும் சிறுத்தையை பிடிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல தீயணைப்பு வீரர்களும் சிறுத்தையை பிடிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தீவிர பணிகள்
இத்தனை முயற்சிகள் செய்தும் முதல் நாள் சிறுத்தையைப் பிடிக்க முடியவில்லை. இரண்டாவது நாளாக நேற்றும் சிறுத்தையைப் பிடிக்கும் பணி தீவிரமாக நடந்தது. வனசரக அலுவலர் தினேஷ்குமார், ரேஞ்சர் சந்தியா தலைமையிலான வனத்துறையினர் குடோனுக்குள் சென்று சிறுத்தையை பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர். குடோன் பெரிதாக இருந்ததால், அங்கு சிறுத்தை எங்கு இருக்கிறது என வனத்துறையால் கண்டுபிடிக்கமுடியவில்லை.
மயக்க ஊசி
குடோனுக்குள் சிறுத்தை இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்து, அதை கண்காணிக்க குடோனுக்குள் ஐந்து இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டது. சிறுத்தையை மயக்க ஊசி போட்டு பிடிக்க முடிவு செய்யப்பட்டது. அதில் சிக்கல் வர, சிறுத்தை தானாக கூண்டுக்குள் வரும்வரை வனத்துறையினர் காத்திருக்கின்றனர். சிறுத்தை பிடிபட்டதும், மயக்க ஊசி செலுத்த கால்நடை மருத்துவர் சுகுமார் சம்பவ இடத்திற்கு வந்தார். '' சிறுத்தை குடோனுக்குள்ளேயே இருக்கிறது. வெளியே வரவில்லை. உணவிற்காக சிறுத்தை வெளியே வரும்போது கண்டிப்பாக கூண்டுக்குள் சிக்கும். சிறுத்தையின் உயிர் முக்கியமானது. உயர் அதிகாரிகள் உத்தரவுபடி மயக்க ஊசி செலுத்தி சிறுத்தை பிடிக்கப்படும்'' என மருத்துவர் தெரிவித்தார்.
கேமராவில் பதிவு
அங்கு வைத்திருந்த கேமராவில் சிறுத்தையின் நடமாட்டம் பதிவாகி இருக்கிறது. சிறுத்தை கூண்டை நோக்கி வந்து செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளன. இந்த வீடியோவை வனத்துறை அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர். இதையடுத்து கோவை மண்டல வனக்காப்பாளர் ராமசுப்பிரமணியம் சிறுத்தை புலி பதுங்கி உள்ள குடோனை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
|
விரைவில் பிடிபடும்
''இந்த சிறுத்தை ஏற்கனவே இந்தப்பகுதியில் இருந்த நாய்களை வேட்டையாடியது என்பதை வனக்கால்நடை மருத்துவர்கள் உறுதி செய்துள்ளார்கள். இந்த சிறுத்தைக்கு 3 வயது. மேலும் இது ஆண் சிறுத்தையாக இருக்கலாம். சிறுத்தை பிடிபட்டதும், கோவை மாவட்டத்தில் உள்ள அடர் வனப்பகுதியில் கொண்டு சென்று விட முடிவு செய்துள்ளோம். சிறுத்தை விரைவில் பிடிபடும்'' என செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார் கோவை மண்டல வனப்பாதுகாவலர் ராமசுப்பிரமணியம். குடோனில் பதுங்கியிருந்த சிறுத்தையை பிடிக்கும் முயற்சி 3வது நாளாக இன்றும் தொடர்கிறது.