கோவையில் கல்யாணமான பின்னரும் மகளுக்கு லவ் டார்ச்சர்.. நடுரோடடில் தந்தை செய்த பகீர் சம்பவம்!
கோவை: கோவையில் திருமணமான பின்னரும் தனது மகளுக்கு விடாமல் காதல் தொல்லை கொடுத்து வந்த நபரை வழிமறித்து சரமாரியாக கத்தியால் குத்திய தந்தையை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ஒரு தலையாக காதலித்தவர், அந்த பெண் காதலை ஏற்காத காரணத்திற்காக அந்த பெண்ணின் வீட்டிற்கே சென்று அடிக்கடி டார்சர் செய்திருக்கிறார். இதை தனது தந்தையிடம் அந்த பெண் சொன்னநிலையில் வேதனை அடைந்த அந்த தந்தை, காதல் தொல்லை கொடுத்தவரை கத்தியால் குத்தியது தெரியவந்துள்ளது.
கோவை போத்தனூர் கலைஞர் நகர் பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார்(48). கூலி வேலை செய்து வருகிறார். இவரது மகளை வீராச்சாமி(24) என்பவர் ஒரு தலைபட்சமாக காதலித்து வந்துள்ளார்.
காதல் தொல்லை
அந்த பெண்ணை பின் தொடர்ந்து தனது காதலை அடிக்கடி வெளிப்படுத்தி வந்துள்ளார். அந்த பெண் காதலை மறுத்ததை தொடர்ந்து வீராசாமி அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்று திருமணம் செய்து வைக்கும் படி கேட்டுள்ளார்.
அடிக்கடி தகராறு
ஆனால் பெண்ணின் பெற்றோர்கள் மறுத்த நிலையில் நான்கு வருடங்களுக்கு முன்பு வேறொருவருக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த வீராச்சாமி அந்த பெண் திருமணம் செய்த இடத்தை தெரிந்து கொண்டு அடிக்கடி அங்கே சென்று தகராறில் ஈடுப்பட்டுள்ளார்.
தந்தையே குத்தினார்
இதனை அறிந்த பெண்ணின் தந்தை செல்வகுமார் செட்டிப்பாளையம் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த வீராசாமியை சந்தித்து இது திருமணமான தனது பெண்ணின் வீட்டிற்கு அடிக்கடி சென்று தகராறு செய்வது குறித்து தட்டி கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்ப்பட்டது. இதனை தொடர்ந்து ஆத்திரமடைந்த செல்வகுமார் அவர் மறைத்திருந்த கத்தியை கொண்டு வீராச்சாமியை கழுத்து மற்றும் கை பகுதியில் குத்தியதில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளது.
பெண்ணின் தந்தை கைது
இதனை கண்டு அருகில் இருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். அதனை தொடர்ந்து வீராச்சாமியை மீட்ட பொதுமக்கள் அவரை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இது குறித்து வீராச்சாமி அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த செட்டிப்பாளையம் போலீஸார் செல்வகுமாரை கைது செய்து அவினாசி கிளை சிறையில் அடைத்தனர்.