உதவாத தமிழக, கேரள வனத்துறை.. நாக்கு சிதறி, மேல் தாடையில் காயமடைந்து வலியுடன் சுற்றும் மக்னா யானை
கோவை: கோவை அருகே தமிழக கேரள எல்லையில் நாட்டு வெடிகுண்டு வெடித்ததால் வாயில் காயமடைந்த மக்னா யானை மிகுந்த வலியுடன் அந்த வனப்பகுதியில் சுற்றிக் கொண்டிருக்கிறது. இந்த யானைக்கு தமிழக, கேரள வனத்துறையினர் உதவி செய்ய வேண்டும் என விலங்குகள் நல ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.
Recommended Video
கேரள மாநிலம் மன்னார்காடு அருகே அன்னாசி பழத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டதை அறியாத கர்ப்பிணி யானை ஒன்று அந்த பழத்தை உணவாக கருதி வாயில் போட்டதால் வெடிகுண்டு வெடித்து யானை பலியானது. இது நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
தற்போது அந்த மன்னார்காடு அருகே தமிழக- கேரள எல்லையில் நாட்டு வெடிகுண்டால் மக்னா என்ற தந்தம் இல்லாத ஆண் யானை வலியுடன் சுற்றிக் கொண்டிருக்கிறது.
அதிர்ச்சி தரும் வீடியோ.. சென்னையா இது.. லாக்டவுன் தளர்வு அறிவிக்கப்பட்ட முதல் சன்டேயே மிக மோசம்!
யானை தொடர் கண்காணிப்பு
கோவை மாவட்டம் மருதமலை அருகே வாயில் காயத்துடன் சாப்பிட முடியாமல் இந்த யானை அவதி அடைந்து வருகிறது. இத்தனை நாட்களாக தமிழக வனத்துறையினர் அந்த யானையை கண்காணித்து வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் அதுவலி தாள முடியாமல் அங்கும் இங்கும் ஓடி கொண்டே கேரள எல்லையில் உள்ள வனத்துறைக்கு சென்றுவிட்டது.
சிறப்புப் படை
அங்கு வந்த அந்த யானைக்கு கேரள வனத்துறையினரும் சிகிச்சை அளித்ததாக கூறப்படுகிறது. தற்போது அந்த யானை மீண்டும் தமிழகத்திற்குள் வந்துவிட்டது. இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில் சிறப்புப் படை அமைத்து அந்த யானையை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்.
உணவு
அந்த யானைக்கு உணவுடன் நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகளையும் கொடுத்து வருகிறோம் என்றனர். இந்த நிலையில் அந்த யானை மாங்கரைக்கு வந்துவிட்டது. அங்கு இருக்கும் எஸ்டிஎஃப் முகாமில் சமையல் செய்யும் இடத்திற்கு மக்னா நுழைந்துவிட்டது.
பட்டாசு வெடித்து விரட்டும்
இதையடுத்து அந்த யானையை பட்டாசு வெடித்து விரட்டும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். ஏற்கெனவே காயமடைந்துள்ள யானைக்கு மேலும் பீதி ஏற்படுத்துவது போல பட்டாசு வெடித்து விரட்டுவதற்கு விலங்குகள் நல ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த யானைக்கு நாக்கு சிதறி மேல் தாடை பகுதி படுகாயமடைந்துள்ளது.
உயிரிழக்க வாய்ப்பு
இந்த யானைக்கு மயக்க ஊசி செலுத்தினால், அது உயிரிழக்க வாய்ப்புள்ளதால் அதை பட்டாசு வெடித்து விரட்டுகிறோம் என வனத்துறையினர் தெரிவிக்கிறார்கள். கேரளாவுக்கு சென்றால் அந்த யானையை அந்த வனத்துறையினர் விரட்டுவதாகவும் தமிழக எல்லைக்கு வந்தால் தமிழக வனத்துறையினர் விரட்டுவதாகவும் விலங்குகள் நல ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகிறார்கள். அந்த யானைக்கு உரிய சிகிச்சை இருவரும் அளிக்க வேண்டும் என்பதே அனைவரின் வேண்டுகோள் ஆகும்.