கோவை அருகே.. யானையை கட்டி வைத்து.. ஈவு இரக்கமில்லாமல் கொடூர தாக்குதல்.. பதைக்க வைத்த பாகன்கள் கைது
கோவை: தேக்கம்பட்டி பகுதியில் யானைகள் புத்துணர்வு நல்வாழ்வு முகாமில், ஸ்ரீவில்லிபுத்தூர் கோவில் யானையை பாகன்கள் கடுமையாகத் தாக்கும் வீடியோ வெளியாகி பதைபதைக்க வைத்த நிலையில், இரு பாகன்கள் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
Recommended Video
தமிழகத்தில் யானைகள் புத்துணர்வு முகாம் கடந்த 7ஆம் தேதி கோயம்புத்தூர் மாவட்டம் தேக்கம்பட்டி பகுதியில் தொடங்கியது. இதற்காக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் யானைகள் தேக்கம்பட்டிக்கு அழைத்து வரப்பட்டுள்ளன.
இந்நிலையில், இன்று யானைகள் புத்துணர்வு முகாமில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கோயில் யானை ஜெயமால்யதாவை அந்த யானை பாகன் வினில்குமாரும் அவரது உதவி பாகன் சிவபிரசாத்தும் அடித்துத் துன்புறுத்துவதும் காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலானது.
கொடுமையான வீடியோ
மரத்தில், கட்டி வைக்கப்பட்டுள்ள யானையை இருவரும் சேர்ந்து கொடூரமாகத் தாக்கினர். அந்த யானையோ வலி தாங்க முடியாமல் பிளிறியது. பாகன்களின் கட்டளைகளை மதிக்காததால் யானை தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. யாரோ இதை வீடியோவாக பதிவு செய்தனர். இந்த வீடியோ வன உயிரியில் ஆர்வலர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சஸ்பெண்ட்
இந்நிலையில் யானையைத் தாக்கிய பாகன் வினில் குமார், பாகனுக்கு உதவியாக இருந்த சிவபிராகசம் ஆகியோரை சஸ்பெண்ட் செய்து இந்து அறநிலைத் துறை நேற்று உத்தரவிட்டது. ஆனால், இது போதாது என்று விலங்கு ஆர்வலர்கள் வலியுறுத்தினர்.
தீவிர விசாரணை
இந்த சம்பவம் குறித்து இந்து சமய அறநிலையத்துறை உயர் அதிகாரிகள் மற்றும் வனத்துறை உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்ட நிலையில், மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ், பாகன் ராஜா மற்றும் உதவிப்பாகனிடம் விசாரணை மேற்கொண்டனர். போலீசாரும் விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில், வனத்துறையினர், பாகன்கள் 2 பேரையும் வனத் துறைச் சட்டபடி கைது செய்தனர்.
பாகன்கள் கைது
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மற்ற பாகன்கள் வனத்துறையினரை முற்றுகையிட்டனர். இதையடுத்து அவர்களை வனத்துறையினர் சமாதானம் செய்து, கைதான பாகன்களை மேட்டுப்பாளையம் வன அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர். அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.