'சந்திரயான் 2' சவால்களை கடந்தால் சரித்திரம்.. கடைசி வினாடி வரை முக்கியம்.. மயில்சாமி அண்ணாதுரை
கோவை: 'சந்திரயான் 2 ' சவால்களை கடந்தால் நிலவின் துருவ வட்ட பாதையில் இறங்கிய முதல்நாடு என்ற பெருமையையும், யாரும் செல்லாத இடத்திற்கு சென்ற நாடு இந்தியா என்ற பெருமையும் பெற முடியும் எனவும் முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானியும், முன்னாள் சந்திரயான் திட்ட இயக்குனருமான மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்தார்.
சந்திரயான் 2 விண்கலம் இன்று வெற்றிகராக விண்ணில் செலுத்தப்பட்டது. இது தொடர்பாக செலுத்துவதற்கு முன்பு கோவை குனியமுத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் முன்னாள் சந்திரயான் திட்ட இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது அவர் கூறுகையில், "சந்திரயான் 2 இறங்க வேண்டிய இடமும், நேரமும் மிக முக்கியமானது. இறங்கும் இடத்தில் சூரிய ஒளி இருக்கும். நிலவை அடையும் நேரத்தை குறைந்த எரிபொருளில் அடைய திட்டமிடப்பட்டுள்ளது. செப்டம்பர் மாதம் 7ம் தேதி நிலவில் இறங்கும்.
நிலவின் துருவ வட்டபாதையை சரியாக அடைய வேண்டும். இறங்குவதற்கு திட்டமிட்ட பகுதியில் சரியான திசையில் வினாடிக்கு ஓரு கிலோ மீடடர் வேகம் என்பதை குறைத்து, இறங்கும் இடத்தில் கற்கல் இல்லை என்பதை உறுதி செய்த பின் இறக்கப்படும்.
பல தடைகளைக் தாண்டி பல சோதனைகளுக்கு பிறகு சரியான முறையில் சந்திரயான் 2 ஏவப்படுகிறது. சந்திரயான் 2 இறங்க வேண்டிய சரியான இடத்தைக் கவனத்தில் கொண்டு திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. வானில் ஏவும் திட்டத்தைக் மாற்றியமைத்தாலும் சரியான முறையில் இலக்கை அடைய அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. , நிலவில் இறங்கும் வரைக்கும் கவனமாக கண்காணிக்கப்படும். கடைசி வினாடி வரை முக்கியமான தருணம்" இவ்வாறு கூறினார்.