தமிழகத்தை உலுக்கிய மேட்டுப்பாளையம் ஆணவப்படுகொலை.. கைது செய்யப்பட்ட மூவர் சிறையிலடைப்பு
Recommended Video
கோவை: தமிழகத்தை உலுக்கிய மேட்டுப்பாளையம் ஆணவ படுகொலையில் உதவி புரிந்ததாக குற்றம்சாட்டப்பட்ட மூவர், கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட சின்னராஜ், கந்தவேல், ஐயப்பன் ஆகியோரிடம் தீவிர விசாரணை நடத்திய போலீஸார், இறுதியாக கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகேயுள்ள ஸ்ரீரங்கராயன் ஓடை என்ற பகுதியில் இருவேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் காதலித்து வந்தனர். வெள்ளிபாளையம் பகுதியை சேர்ந்தவர் கருப்பசாமி. இரவது மகன்கள் வினோத் மற்றும் கனகராஜ். கனகராஜ் காய்கறி சந்தையில் கூலி தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார்.
கனகராஜ் வேறு சமூகத்தை சேர்ந்த பெண்ணான மூர்த்தி என்பவரது மகள், தர்ஷினி ப்ரியாவை காதலித்து வந்துள்ளார். இருவரும் பல நாட்களாக காதலித்து வந்துள்ளனர். தனது சகோதரன் வேறு சமூகத்தை சேர்ந்த பெண்ணை காதலிப்பதை அறிந்த வினோத், வர்ஷினி பிரியாவுடனான காதலை கைவிடுமாறு பலமுறை எச்சரித்துள்ளார். ஆனால் சகோதரரின் எச்சரிக்கையை பொருட்படுத்தாத கனகராஜ் தனது காதலை தொடர்ந்துள்ளார்.
ஒரு கட்டத்தில் கனகராஜ், தர்ஷினி ப்ரியா இருவரும் வீடு எடுத்து தனியாக வசித்து வந்துள்ளனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் கடும் ஆத்திரத்தில் இருந்த கனகராஜின் அண்ணன் வினோத்துக்கு, இந்த சம்பவம் மேலும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. எனவே வினோத் கனகராஜின் இந்த செயலுக்கு பலத்த எதிர்ப்பு தெரிவித்தார்.
ஆனால் எதிர்ப்புகளையெல்லாம் கண்டு கொள்ளாமல் வழக்கம் போல தனது வேலைகளை கவனித்து கொண்டிருந்தார் கனகராஜ். இந்நிலையில் கடந்த 25ம் தேதி மாலை கனகராஜின் வீட்டிற்கு சென்ற வினோத், வர்ஷினி பிரியாவை கைவிட்டு தம்முடன் வந்து விடுமாறு எச்சரித்தார்.
ஆனால் இதற்கு மறுப்பு தெரிவித்த கனகராஜ், சகோதரன் வினோத்துடன் கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். வாக்குவாதம் முற்றிய நிலையில் வினோத் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து கனகராஜை சரமாரியாக வெட்டி தள்ளினார்.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த தர்ஷினி ப்ரியா குறுக்கே வந்து தடுக்க முயற்சித்தார். இதனால் அவரையும் வினோத் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடினார். அரிவாளால் வெட்டப்பட்டதில் படுகாயமடைந்த கனகராஜ், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
படுகாயமடைந்த தர்ஷினி ப்ரியா சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார். இந்நிலையில் ஆணவப்படுகொலை செய்த வினோத்தை கைது செய்த காவல்துறையினர், தீவிர விசாரணை நடத்தினர் இதில் இந்த படுகொலைக்கு மூவர் உதவிய தகவல் தெரிய வந்தது.
இதனையடுத்து தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்திய போலீஸார், ஆணவ படுகொலைக்கு உதவிய குற்றச்சாட்டில் சின்னராஜ், கந்தவேல், ஐயப்பன் ஆகிய மூவரையும் கைது செய்து தற்போது சிறையில் அடைத்துள்ளனர்.