தேர்தல் அறிவிக்கட்டும்.. "வெற்றி மீது வெற்றி" பாடலை மனதில் பாடும் ராஜேந்திர பாலாஜி
கோவை: தேர்தல் தேதி அறிவித்தவுடன் அதிமுக சார்பில் மெகா கூட்டணி அமைக்கப்படும் என்றும் அதற்கான வியூகத்தை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வகுத்து வருகிறார் என்றும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.
கோவையில் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில் ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் தமிழக முதல்வர் அரசின் நிலைப்பாட்டை தெளிவாக சொல்லி இருக்கின்றார்.
ஸ்டெர்லைட் ஆலை திறப்பது என்பதற்கு சாத்தியக்கூறே கிடையாது. கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு குறைவான இழப்பீடு கொடுக்கின்றனர் என்ற குற்றச்சாட்டு தவறானது.
எதிரானவர்கள்
நிவாரணம் வழங்குவதில் எந்த முறைகேடும் நடக்கவில்லை. அனைத்து நிவாரண திட்டங்களும் மக்களுக்கு சென்று கொண்டு இருக்கின்றது. கஜா புயல் நிவாரணம் கிடைக்கவில்லை என பேட்டி கொடுக்கும் மக்களை பார்த்தால் அவர்கள் அதிமுக கட்சிக்கு எதிரானவர்களாகத்தான் இருப்பார்கள்.
பணிபுரிந்து
புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 90 சதவீத்திற்கு மேல் மின்சார இணைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. மின்வாரிய ஊழியர்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கடுமையாக பணிபுரிந்து வருகின்றனர். டிடிவி தினகரனுடன் சென்றவர்கள் எல்லாரும் நொந்து போய் இருக்கின்றனர். அங்குள்ள எம்.எல்.ஏக்கள் எல்லாரும் திரும்பி வர வாய்ப்பு இருக்கிறது. தவறான முடிவு எடுத்து விட்டோம் என அவர்கள் வருந்துகின்றனர்.
திமுகவுக்கு செல்லவில்லை
கட்சியில் இருந்து வெளியே சென்ற கீழ் மட்ட நிர்வாகிகள் அதிமுகவிற்கு வந்துகொண்டு இருக்கின்றனர். டிடிவி தினகரனுடன் எந்த பேச்சும் நடக்கவில்லை.
செந்தில் பாலாஜியுடன் அதிமுகவினர் யாரும் திமுகவிற்கு செல்லவில்லை.
நல்ல முடிவு
7 பேர் விடுதலையில் தமிழக அரசு சுணக்கமாக செயல்படவில்லை. கவர்னர் கையில் தான் முடிவு இருக்கிறது. தமிழக முதல்வர் தொடர்ந்து இது குறித்து அழுத்தம் கொடுத்து கொண்டு இருக்கிறார். நல்ல முடிவு கிடைக்கும்.
திமுக கூட்டணி
3 பேர் ,7 பேர் என்ற பாகுபாடு அதிமுக அரசிற்கு கிடையாது. அரசியலில் உள்ள சில சதுரங்க விளையாட்டுகளால் 7 பேர் விடுதலையில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. பயம் இருப்பதால் தேர்தலுக்கு முன்பு திமுக கூட்டணி அமைத்துள்ளது.
அமைச்சர் கருத்து
தேர்தல் அறிவித்தவுடன் அதிமுக சார்பில் மெகா கூட்டணி அமைக்கப்படும். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதற்கான வியூகம் அமைத்து வருகிறார். அதிமுக கூட்டணிதான் வெற்றிக்கூட்டணியாக இருக்கும் என அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தெரிவித்தார்.