ஸ்டாலின் ஆட்சி.. ஆன்மிகவாதிகளுக்கு 'பொற்காலமாக' இருக்கும்.. அமைச்சர் சேகர் பாபு அதிரடி பேச்சு
கோவை: ஆன்மிக பெருமக்கள் மகிழ்ச்சியடைந்து ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சிக் காலம் ஆன்மிகவாதிகளின் பொற்காலம் எனப் பாராட்டும் வகையில் இந்து சமய அறநிலையத்துறை செயல்பாடுகள் இருக்கும் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அறநிலையத்துறை அமைச்சராக சேகர்பாபு பொறுப்பேற்றது முதலே பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை அவர் தொடர்ந்து எடுத்து வருகிறார். மாநிலம் முழுவதும் உள்ள கோயில்களில் தொடர் ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார்.
மேலும், கோயில் நிலங்களை ஆக்கிரமிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதி அளித்துள்ளார். அவரது செயல்பாடுகளைப் பொதுமக்கள் தொடர்ந்து பாராட்டி வருகின்றனர்.
சட்டசபையில் கருணாநிதியின் உருவப்படம் .. ஆக. 2ல் திறந்து வைக்கிறார் குடியரசுத் தலைவர்
அமைச்சர் சேகர்பாபு ஆய்வு
இந்நிலையில், அமைச்சர் சேகர்பாபு இன்று கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் அமைந்துள்ள வனப்பத்திர காளியம்மன் கோயில், சுப்பிரமணிய சுவாமி கோயில் ஆகியவற்றை அமைச்சர் சேகர்பாபு இன்று ஆய்வு செய்தார், அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு, "சில கோயில்களில் இருக்கும் பரம்பரை அறங்காவலர்களுக்குக் கோயில் திருப்பணிகளில் நாட்டம் இல்லை.
கோயில் குடமுழுக்கு
கோயில் திருப்பணிகள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த பிரச்சினையைக் களையத் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து தடைகளையும் உடைத்தெறிந்து கோயில் திருப்பணிகள் வேகமாக நடைபெறத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். பல ஆண்டுகளாகக் குடமுழுக்கு நடைபெறாத கோயில்களில் விரைவில் குடமுழுக்குகள் நடத்தப்படும்.
ஆன்மிகவாதிகளின் பொற்காலம்
திருக்கோவில்களில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரியும் பணியாளர்கள் நிரந்தரமாக்கப்படுவார்கள். கருணை அடிப்படையில் வாரிசுகளுக்கு வேலை, திருக்கோவில்களில் காலியாக உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவது ஆகிய பணிகள் அடுத்த மாதம் இறுதிக்குள் முடிக்கப்படும். ஆன்மிக பெருமக்கள் மகிழ்ச்சியடைந்து ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சிக் காலம் ஆன்மிகவாதிகளின் பொற்காலம் எனப் பாராட்டும் வகையில் இந்து சமய அறநிலையத்துறை செயல்பாடுகள் இருக்கும்.
யானை புத்துணர்வு முகாம்
யானை புத்துணர்வு முகாம் குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதனால் கோயில்களிலேயே யானைகள் புத்துணர்வாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 3 மாதத்திற்கு ஒரு முறை கோவில் யானைகளுக்கு முழு உடற்பரிசோதனை நடைபெறுகிறது. 15 நாட்களுக்கு ஒருமுறை மருத்துவர்கள் மூலம் பரிசோதனைகள் நடத்தப்படுகிறது. தேவை ஏற்பட்டால் யானைகளுக்கான புத்துணர்வு முகாம் நடத்தப்படும்.
யானைகள்
மேலும், அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் கோயில்களில் வளர்க்கப்படும் யானைகள் அங்கேயே குளிக்கப் பிரத்தியேக குளியல் தொட்டிகள் அமைக்கும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் யானைகள் இல்லாத திருக்கோவில்களுக்குத் தனியார் அமைப்புகளோ, தனிநபர்களோ அன்பளிப்பாக யானை அளித்தால் அதை சட்டப்படி பெற்றுக் கொள்ளத் தயாராக உள்ளோம்" என்று அவர் தெரிவித்தார்.