மழை பெய்ய வேண்டும்.. தண்ணீர் பஞ்சம் தீர வேண்டும் இறைவா... அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழிபாடு
கோவை: கோவையில் மழை வேண்டி கிறிஸ்தவ தேவாலயம் மற்றும் தர்காவில் நடைபெற்ற பிரார்த்தனை, தொழுகையில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கலந்துகொண்டார்.
பருவமழை சராசரி அளவை காட்டிலும் குறைவாக பெய்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் உள்ள 89 அணைகள், 14,098 ஏரிகள் நீரின்றி வறண்டுள்ளது. இதனால், அணைகளில் இருந்து குடிநீர் தேவைக்கு கூட தண்ணீர் விநியோகிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால், தமிழகம் முழுவதும் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் இருந்து விவசாய நிலங்களில் இருந்து கிணறுகள் மூலம் குடிநீர் சேகரிக்கப்பட்டு விநியோகிக்கப்படுகிறது.
அதே சமயம், சென்னையின் குடிநீர் பற்றாக்குறையை போக்க ஜோலார்பேட்டையிலிருந்து ரயில் மூலம் சென்னைக்கு குடிநீர் கொண்டு வர ரூ.65 கோடி நிதி ஒதுக்கீடு செய்து, முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். இதற்கிடையே, மழைவேண்டி அந்தந்த மாவட்டங்களில், அமைச்சர்கள், கோவில்களில் யாகம் வளர்த்து பூஜை செய்ய வேண்டும் என்று அதிமுக தலைமை உத்தரவிட்டு இருந்தது. அதன்படி, நேற்று முக்கிய கோவில்களில் யாகம் வளர்க்கப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது.
Coimbatore: Tamil Nadu Minister SP Velumani offered prayers for rains, at a Dargah and a Church in the city pic.twitter.com/kW4CcOFk4H
— ANI (@ANI) June 23, 2019
இந்நிலையில் இன்று கோவை இடையர் பாளையத்தில் உள்ள புனித மார்க்ஸ் ஆலயத்தில் மழை வேண்டி நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனையில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கலந்துகொண்டார். பின்னர், கோவை குனியமுத்தூரில் உள்ள ஹஸ்ரத் மூஸா அவுலியா தர்காவில் மழை வேண்டி நடைபெற்ற சிறப்புத் தொழுகையிலும் அவர் கலந்துகொண்டார்.