இஸ்லாமியர்களின் 20 வருஷ கோரிக்கை.. ஓடிசென்று நிறைவேற்றிய அமைச்சர் வேலுமணி.. மதுக்கரை மக்கள் பாராட்டு
இஸ்லாமியர்களின் கோரிக்கையை அமைச்சர் வேலுமணி நிறைவேற்றினார்
கோவை: இஸ்லாமியர்களுக்கு ஓடோடி சென்று உதவி செய்திருக்கிறார் அமைச்சர் வேலுமணி.. 20 வருஷமாக வலியுறுத்தி வந்த கோரிக்கையை, தேர்தல் வரும் சமயத்தில் கனகச்சிதமாக நிறைவேற்றி, ஒட்டுமொத்த மதுக்கரை முஸ்லிம்களின் அபிமானத்தையும் அமைச்சர் பெற்று வருகிறார்!
கோவை மாவட்டம் மதுக்கரை பகுதியில் ஏராளமான இஸ்லாமியர்கள் வாழ்ந்து வருகிறார்கள்.. இறந்தவர்களை அடக்கம் செய்வதற்கென தனியாக தங்களுக்கு கபர்ஸ்தான் நிலம் வழங்க வேண்டும் என்பதுதான் இவர்களின் 20 வருட கோரிக்கையாகும்.
இந்த கோரிக்கையை, உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்பி வேலுமணியிடம் தெரிவித்திருந்தனர்.. அமைச்சரும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று உறுதி தந்திருந்தார்.. பின்னர், அந்த இடத்தை தேர்வு செய்து ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கும் அமைச்சர் உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில், மதுக்கரையில் உள்ள முக்கிய சாலை அருகே இடம் தேர்வானது.. ஒன்றே முக்கால் ஏக்கர் பரப்பளவில், உள்ள அந்த இடத்தின் மதிப்பு, சுமார் ஒரு கோடியே 40 லட்சம் என்று தெரிகிறது. அந்த இடத்தைதான் அமைச்சர் வேலுமணி, அதிகாரிகளுடன் சென்று பார்வையிட்டார்.
இதுசம்பந்தமாக நடந்த நிகழ்ச்சியில் வேலுமணி பேசும்போது, "20 வருஷமாக இஸ்லாமியர்கள் கோரிக்கை வைத்திருந்தது எனக்கு தெரியும்.. எப்படியாவது கபர்ஸ்தான் நிலம் வழங்கப்படும் என்று வாக்குறுதி தந்திருந்தேன்.. அதன்படியே இந்த நிலம் தேர்வாகி உள்ளது..
இதுபோலவே, கிறிஸ்தவர்களுக்கும் தனியாக மயானம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்... இன்னும் என்னென்ன வளர்ச்சி தேவையோ சொல்லுங்கள், எல்லாவற்றையும் நாங்கள் செய்து தருகிறோம்" என்றார் வேலுமணி. ஏற்கனவே கொங்கு மண்டலத்தில் அதிமுக வலுவாக உள்ள நிலையில், தேர்தல் நெருங்கும் சமயத்தில், தங்கள் பலத்தை மேலும் தக்க வைக்க முயன்று வருகிறது.
இப்படித்தான், கொங்கு மண்டல மலையாளிகளின் 4 லட்சம் வாக்குகளையும் அதிமுக அரசு தக்க வைத்து வருகிறது.. அங்கு வசிக்கும் ஈழுவா மற்றும் தீயா சமுதாயத்தை சேர்ந்த மலையாளிகள் பிற்படுத்தப்பட்ட பட்டியலில் தங்களை சேர்க்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்த நிலையில், அந்த கோரிக்கையை அதிமுக தரப்பு நிறைவேற்றி தந்ததாம்... இப்போது அமைச்சரும் இஸ்லாமியர்களுக்கான கோரிக்கையை நிறைவேற்றி உள்ளதால், நிச்சயம் இதெல்லாம் வாக்காக உருமாறும் என்றும் நம்பப்படுகிறது.