சிலம்பம் சுற்றி அசத்திய அமைச்சர் வேலுமணி... குனியமுத்தூரில் களைக்கட்டிய பொங்கல் கொண்டாட்டம்
கோவை: குனியமுத்தூர் பகுதியில் நடைபெற்ற பொங்கல் விழாவில் கலந்து கொண்ட தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி சிலம்பம் சுற்றி அசத்தினர்.
Recommended Video
கோவை தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட குனியமுத்தூர் பகுதியில் அந்த ஊர் பொது மக்கள் மற்றும் நல்லறம் அறக்கட்டளை சார்பாகப் பொங்கல் விழா தர்ம ராஜா திரௌபதி அம்மன் கோவில் வளாகத்தில் நடைபெற்றது.
இதில் அப்பகுதியைச் சேர்ந்த நூறுக்கும் மேற்பட்ட பெண்கள் கோவில் வளாகத்தில் அமர்ந்து தனித்தனியாக அடுப்பு மூட்டிப் பொங்கல் பாணை வைத்துப் பொங்கலிட்டனர். இந்த விழாவை முன்னிட்டு அப்பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவ, மாணவிகளின் பறை இசை மற்றும் சிலம்பாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது.
விழாவில் சிறப்பு அழைப்பாளராகத் தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி கலந்து கொண்டு பொங்கல் வைத்த அனைத்து பெண்களுக்கும் தமது வாழ்த்துகளை தெரிவித்தார். முன்னதாக பொங்கல் விழாவில் நூற்றுக்கும் மேற்பட்ட சிறுவர், சிறுமிகள் இணைந்து தமிழர்களின் பண்பாட்டைப் பறைசாற்றும் பறை இசை, சிலம்பம் போன்ற கலைகளில் இருக்கம் தங்கள் திறமையை வெளிப்படுத்தினர். இதை ரசித்த அமைச்சர் வேலுமணி, அம்மாணவர்களை வெகுவாக பாராட்டினார்.
மேலும் அவர்களுடன் இணைந்து அமைச்சர் வேலுமணியும் சிலம்பம் சுற்றி அசத்தினார். விழாவில் குனியமுத்தூர் பகுதி கழக செயலாளர் மதனகோபால், மணிகண்டன் யாத்திரை குழு தலைவர் ஜோதி பாசு, முந்திரி கோபால், வட்ட கழக செயலாளர் ஜெகன் உட்படப் பலர் கலந்து கொண்டனர்.