அடடே.. சட்டசபையில் அதிமுகவை விட அதிகம் கவனம் ஈர்த்த பாஜக.. முதல்வரிடம் அடுக்கடுக்காக கேள்விகள்!
சென்னை: பிரதான எதிர்க்கட்சியாக அதிமுக இருந்தாலும் தமிழக சட்டசபையில், பாஜகதான் திமுக அரசின் கொள்கைகள் சார்ந்த பல விஷயங்களில் குரல் எழுப்பியுள்ளது.
நேற்றைய சட்டசபை அலுவல் நேரத்தில், முக்கியமான பல விஷயங்களில், பாஜக சட்டசபை குழு தலைவர் நயினார் நாகேந்திரன்தான் குரல் எழுப்பி, முதல்வரிடமும் பதில் பெற்றுள்ளார்.
கோவை மாவட்டத்தை திமுக அரசு புறக்கணிப்பதாக நயினார் நாகேந்திரன் ஆவேசப்பட, அதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், சட்டசபையில் விளக்கமும் அளித்துள்ளார்.
மகிழ்ச்சி செய்தி.. எல்லா வகை கொரோனாவையும் விரட்ட ஒரே தடுப்பூசி! எலிகளுக்கு நடந்த பரிசோதனை வெற்றி
இரண்டாவது நாள்
ஆளுநர் உரையின் மீது இரண்டாம் நாளாக நேற்று சட்டசபையில், விவாதம் நடைபெற்றது. அப்போது கோவை விவகாரம் எழுந்தது.
திமுக அரசு கோவையை புறக்கணிப்பதாக வெளியே பல அதிமுக தலைவர்களும் கூறி வந்தனர். அதே பிரச்சினை சட்டசபையில் எதிரொலித்தது.
நயினார் நாகேந்திரன் பேச்சு
பாஜக சட்டசபைக் குழு தலைவர் நயினார் நாகேந்திரன், இந்த விவகாரத்தை கிளப்பி பேசினார். அனைவருக்குமான அரசு என்று முதல்வர் ஸ்டாலின் கூறுகிறார். ஆனால் கோவையில் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக ஆளுநர் உரையில் இடம் பெறாதது வருத்தம் அளிக்கிறது. தென்னிந்தியாவின் மான்செஸ்டர் கோவை. மாநிலத்திற்கு, தனது தொழில்கள் மூலம், அதிக வருமானத்தை ஈட்டித் தருவதும் கோவை. ஆனால் ஆளுநர் உரையில் கோவை புறக்கணிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
பட்டியல் கொடுத்தால் நல்லா இருக்கும்
இந்த குற்றச்சாட்டுக்கு எழுந்து, பதில் அளித்துப் பேசிய முதல்வர் ஸ்டாலின், கோவையை எந்தெந்த வகையில் அரசு புறக்கணிக்கிறது என்று பட்டியல் போட்டு சொன்னீர்கள் என்றால், பதில் அளிக்க எனக்கு வசதியாக இருக்கும். வாக்களித்தவர்கள் பெருமைப்படும் அளவுக்கும் வாக்களிக்காதவர்கள் திமுகவுக்கு ஏன் வாக்களிக்கவில்லை என்று எண்ணும் அளவிற்கும் திமுக அரசின் செயல்பாடுகள் இருக்கும். தேர்தல் முடிவுகள் வந்த உடனேயே இதை நான் தெரிவித்தேன். அதே மாதிரி அரசு நடந்து கொண்டுள்ளது. கோவையை எந்த வகையிலும் திமுக அரசு புறக்கணிக்கவில்லை. பிரதமரைச் சந்தித்து மனு அளித்த போது கூட கோவையில் எய்ம்ஸ் மருத்துவமனையை அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தேன். கோவைக்கு இன்னும் அதிகமான பணிகளைச் செய்ய காத்திருக்கிறோம். அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வகையில்தான் எங்களது பணிகள் இருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
முதல்வருடன் நயினார் நட்பு
இன்னொரு பக்கம், "பிசிராந்தையாரும் கோப்பெருஞ்சோழனும் போல நானும் முதல்வரும்" "எனக்கு கூடுதல் நேரம் வேண்டும்" என்று கூறி கலகலக்க வைத்தார் நயினார். அதேபோலத்தான், சட்டசபையில் நேற்று பல விஷயங்களையும் அவர் நேரம் எடுத்து பேசியதை கவனிக்க முடிந்தது.
கோவை செல்வாக்கு
கோவை மாவட்டத்தின் 10 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணிதான் வென்றது. 9ல் நேரடியாக அதிமுகவும், கோவை தெற்கில் கூட்டணி கட்சியான பாஜகவும் வென்றன. ஆனால் கோவை விவகாரத்தை அதிமுகவை விட பாஜக தீவிரமாக கிளப்பியுள்ளது. தமிழகத்தில் பாஜகவுக்கு செல்வாக்கு உள்ள ஒரு சில மாவட்டங்களில் கோவையும் ஒன்று என்பது இதற்கு காரணம்.
ஒன்றிய அரசு
இன்னொரு பக்கம், கடந்த சில வாரங்களாக அதிகம் பேசப்படும் விஷயமான ஒன்றிய அரசு என்ற சொல்லாடலையும் நயினார் நாகேந்திரன் கேள்வி கேட்டார். இதற்கு பதிலளித்த முதல்வர், யாரும் பதற்றமடைய வேண்டாம். இது தவறான வார்த்தையில்லை என்று நீண்ட விளக்கம் அளித்தார். ஆக மொத்தம் முக்கிய விஷயங்களை அதாவது மக்களிடையே பேசப்படும் விஷயங்களை அதிமுகவை விட பாஜக அதிகமாக எழுப்பி பதில் பெற்றதை பார்க்க முடிந்தது.