கோவை கலெக்டர் ஆபிஸில் வானரக் கூட்டம்... சுத்தி பாக்க வந்துச்சோ!
Recommended Video
கோயம்புத்தூர் : கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமையன்று குரங்கு கூட்டம் ஒன்று ஒய்யார நடைபோட்டு சென்றது. வனப்பகுதியை விட்டு நகரின் மையப்பகுதியான மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் குரங்குகள் வந்தது எப்படி என்று அந்தப் பகுதி மக்கள் ஆச்சரியமடைந்தனர்.
கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் ரயில் நிலையம் செல்லும் சாலையில் வாகனங்கள் அதிகம் வந்து செல்லும் நெரிசல் மிக்க நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது. நேற்றைய தினம் ஞாயிற்றுக் கிழமை என்பதால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. அப்போது ஆறு குரங்குகள் நிதானமாக மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தினுள் நடந்து சென்றன.
ஆட்சித் தலைவர் அலுவலகத்தைத் தாண்டி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மற்ற கட்டிடங்களுக்கும் சாதாரணமாக நடந்து சென்றன. நாய்கள் குரைத்ததால் அவை கார் நிறுத்துமிடத்திலிருந்து நேராக மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகம் உள்ள பகுதிக்கு சென்று விட்டன.
இந்த குரங்குகள் எங்கு இருந்து வந்தன என்பது குறித்த தகவல்கள் தெரியவில்லை. இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. நகரின் மையப்பகுதியில் இருக்கும் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்திற்கு குரங்குகள் வந்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.