கோவை அருகே காயங்களுடன் வலம்வந்த காட்டு யானை உயிரிழப்பு- நடப்பாண்டில் 20வது யானை மரணம்!
கோவை: கோவை அருகே மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் காயங்களுடன் வலம்வந்த காட்டு ஆண் யானை வியாழக்கிழமை மாலை உயிரிழந்தது. நடப்பாண்டில் கோவை வனப்பகுதியில் 20வது காட்டு யானை உயிரிழந்துள்ளது.
மேட்டுப்பாளையம் நெல்லித்துறை வனப் பகுதியில் 25 வயது மதிக்கத்தக்க காட்டு யானை காலில் படுகாயத்துடன் சுற்றி திரிந்தது. இதனால் இந்த காட்டு யானைக்கு கும்கி யானைகள் மூலம் சிகிச்சை அளிக்க வனத்துறையினர் திட்டமிட்டனர்.
இதனையடுத்து அந்த வனப்பகுதிக்கு 2 கும்கி யானைகள், மருத்துவர்கள் குழு அழைத்துச் செல்லப்பட்டனர். ஆனால் காட்டு யானை திடீரென வனப்பகுதிக்குள் நுழைந்தது. இதனால் வனப்பகுதியில் இருந்து அந்த யானையை சமவெளிக்குள் அனுப்ப முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
நாக்கு துண்டாகி.. தாடையில் காயமடைந்து.. ஒரு மாதமாக வலியுடன் போராடிய மக்னா யானை உயிரிழப்பு
இந்த நிலையில் வியாழக்கிழமை மாலை வனப்பகுதியில் அந்த காட்டு யானை உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது. கோவை வனப்பகுதியில் இந்த ஆண்டில் உயிரிழந்த 20வது யானை இது. யானைகள் அடுத்தடுத்து உயிரிழந்து வருவது வன ஆர்வலர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
கிருஷ்ணகிரியில் எச்சரிக்கை
இதனிடையே கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே பேரண்டப்பள்ளி வனப்பகுதியிலிருந்து வெளியேறிய ஒற்றையானை கிராமப்பகுதிகளில் ஆக்ரோசமாக சுற்றித் திரிவதால் கிராம மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு ஒலி பெருக்கி மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பேரண்டப்பள்ளி சுற்றியுள்ள கிராமங்களான குண்டு குறுக்கை , கொற குறுக்கி , கானலட்டி உள்ளிட்ட பகுதியில் உள்ள விவசாயிகள் ஆடு மாடுகளை மேய்க்க வனப்பகுதிக்குச் செல்ல வேண்டாம் எனவும் இரவு நேரங்களில் தோட்டங்களில் காவல் காக்க செல்ல வேண்டாம் எனவும் காலையில் விடிந்தபின் விவசாய தோட்டத்திற்கு செல்ல வேண்டு என்றும் ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.