ஐஎஸ் தீவிரவாதிகளுடன் தொடர்பு.. கோவையில் 2வது நாளாக என்ஐஏ அதிகாரிகள் சோதனை
Recommended Video
கோவை: இலங்கையில் குண்டுவெடிப்பை நிகழ்த்திய ஐஎஸ் தீவிரவாதிகளுடன் தொடர்பில் இருந்த புகாரையடுத்து கோவையைச் சேர்ந்த முஸ்லிம் இளைஞர்கள் 6பேரின் வீடு மற்றும் அலுவலங்களில் என்ஐஏ அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். இந்நிலையில் இரண்டாவது நாளாக இன்றும் சோதனை நடத்தி வருகிறார்கள்.
இலங்கையில் ஏப்ரல் 22-ல் தேவாலயங்கள் மற்றும் ஹோட்டல்களை குறிவைத்து தற்கொலைப் படையினர் தாக்குதல்கள் நடத்தினர். இதில் 40 வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் உட்பட 350க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.
இத்தாக்குதல்களுக்கு சர்வதேச தீவிரவாத இயக்கமான ஐ.எஸ்.ஐ.எஸ். பொறுப்பேற்றுள்ளது. இலங்கை மட்டக்களப்பைச் சேர்ந்த சஹ்ரான் தலைமையிலான குழுவினரே தற்கொலைப் படையினராக செயல்பட்டு இந்த நாசாகர செயலை நடத்தியுள்ளனர்.
இதுவா, அதுவா.. இருக்கிறோமோ.. இல்லையா... குழம்பி தவிக்கும் அதிருப்தி எம்எல்ஏக்கள்
இலங்கை தீவிரவாதிகளுடன் தொடர்பு
இலங்கையில் குண்டுவெடிப்புக்கு முன்பு கோவையில் கடந்த ஆண்டு இந்து இயக்க தலைவர்களை கொலை செய்ய திட்டம் தீட்டியதாக முஸ்லிம் இளைஞர்கள் சிலர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த இளைஞர்களுடன் கருத்துக்களையும், தகவல்களையு பரிமாறியது தெரியவந்தது இதில் சில இளைஞர்கள் இலங்கையைச் சேர்ந்தவர்களுடன் தொடர்பில் இருப்பதும் தெரியவந்தது.
முக்கிய ஆவணங்கள்
இந்நிலையில் என்ஐஏ அதிகாரிகள் கடந்த மாதம் கோவையில் உள்ள சிலரது வீடுகளில் சோதனை நடத்தினார்கள். அப்போது மதக்கொள்கைகள் பரப்பும் துண்டு பிரசுரங்கள் மற்றும் முக்கிய ஆவணங்களை கைப்பற்றி சென்றனர்.
6பேரை பிடித்து விசாரணை
இந்நிலையில் நேற்று கேரளா மாநிலம் கொச்சியில் இருந்து வந்த என்ஐஏ அதிகாரிகள், கோவையில் உக்கடம், போத்தனூர், குனியமுத்தூர் பகுதிகளைச் சேர்ந்த முகமது அசாருதின், ஷாகின் ஷா என்ற இப்ராஹிம், ஷேக் இதாயத்துல்லா, அபுபக்கர், சதாம் உசேன், அக்ரம் ஜிந்தா உள்ளிட்ட ஆறு பேருக்கு சொந்தமான வீடுகள் அலுவலகங்களில் சோதனை நடத்தினர். இந்த ஆறுபேரையும் என்ஐஏ அலுவலகத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
5 பேரை ஆஜராக உத்தரவு
இதில் அசாரூதின் என்பவரை ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு ஆதரவாக பேஸ்புக்கில் கருத்து பதிவிட்டதாக கைது செய்தனர். மற்ற ஐந்து பேரையும் கொச்சியில் உள்ள என்ஐஏ அலுவலகத்தில் ஆஜராக உத்தரவிட்டுள்ளனர்.
என்ஐஏ அதிகாரிகள் சோதனை
இந்நிலையில் கோவையில் 3 இடங்களில் இரண்டாவது நாளாக என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். அன்பு நகர் ஷாஜகான், கரும்புக்கடை ஷபியுல்லா வின்சென்ட் ரோடு முகமது உசேன் வீடுகளில் சோதனை நடத்தி வருகிறார்கள்.