அர்ஜுன் சம்பத் உள்ளிட்ட இந்து அமைப்பினரை கொல்ல திட்டமா? என்ஐஏ சீக்ரெட் ஆபரேஷன்.. சிக்கிய 5 பேர்!
கோயம்புத்தூர்: கோவையில் கடந்த செப்டம்பர் மாதம் 1ம் தேதி இந்து அமைப்பினரை கொலை செய்ய திட்டமிட்டதாக ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். இதுவரை மொத்தம் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இவ்வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டுள்ளது.
இன்று கோவை மற்றும் திண்டிவம் உள்ளிட்ட நான்கு பகுதிகளில் தேசிய புலனாய்வு அமைப்பினர் திடீர் சோதனை நடத்தினார்கள். கடந்த சில மாதங்களாக புலனாய்வுத்துறை நடத்திய சீக்ரெட் ஆபரேஷனின் ஒரு கட்டமாக இந்த சோதனை நடைபெற்றது.
சோதனையின் முடிவில் கோவையை சேர்ந்த சில இந்து அமைப்பை சேர்ந்த தலைவர்களை கொலை செய்ய திட்டமிட்டதாக தேசிய புலனாய்வு அமைப்பு சிலரை கைது செய்துள்ளது. இவர்களை கைது செய்வதற்கு முன், தேசிய புலனாய்வு அமைப்பு அவர்களை மிகவும் தீவிரமாக கடந்த சில மாதங்களாக கண்காணித்ததாக கூறப்படுகிறது.
பிரிவுகள்
இந்து அமைப்பை சேர்ந்த தலைவர்களை கொலை செய்ய திட்டம் தீட்டியதாக கோவையை சேர்ந்த ஆசிக், விழுப்புரம் மாவட்டதை சேர்ந்த இஸ்மாயில், சென்னையை சேர்ந்த ஜாபர் சாதிக் அலி, சலாவுதீன், சம்சுதீன் ஆகிய 5 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக செயல்படுவதற்கு சதி திட்டம் தீட்டுவது (143), கூட்டு சதி (120 (பி)), மற்றும் தடுப்புக்காவல் சட்டமான UAPA சட்டத்தின்படி அரசுக்கும், மத கலவரத்தை தூண்டும் வகையில் செயல்படுவது என்று பிரிவு 15,16,18 , 20, 38 (2) ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
யார் ஆசிக்
கோவை வெரைட்டி ஹால் சாலை சுந்தரம் வீதி, சுங்குவார் சந்து பகுதியில் வசித்து வருபவர் ஆசிக். இவர் ஐஎஸ் அமைப்பை சேர்ந்த தீவிரவாதியாக இருக்க வாய்ப்புள்ளது என்று தகவல்கள் வருகிறது. இவரை கடந்த சில மாதங்களாக தேசிய புலனாய்வு துறை தீவிரமாக கண்காணித்து வந்தது.
ஆசிக் நண்பர்கள்
ஆசிக்கை காவல்துறையினர் மற்றும் தேசிய புலனாய்வு துறையினர் ரகசியமாக கண்காணித்து வந்த நிலையில், ஆசிக்கை சென்னையிலிருந்து சந்திக்க 4 பேர் வருவதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. இது காவல்துறையினருக்கு மேலும் சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதனையடுத்து, கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி ரயில் மூலமாக வந்த 4 பேருடன், ஆசிக்கை பிடித்து வெரைட்டி ஹால் காவல்துறையினர் விசாரித்தனர்.
முக்கிய விசாரணை
5 பேரிடமும் மத்திய உளவுப்பிரிவினரும், சிறப்பு புலனாய்வு பிரிவினரான எஸ்.ஐ.யு.வும் விசாரித்தனர். கைது செய்யப்பட்டவர்கள் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்பில் ரகசிய உறுப்பினருமாக இருந்து வந்ததும், இஸ்லாம் மதத்திற்கு எதிராக சமூக வலைத்தளங்களில் கருத்து பதிவிட்டு வருபவர்களை கண்காணித்து வந்ததும் தெரியவந்தது.
என்ன நடந்தது
கோவையை சேர்ந்த இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத், சக்திசேனா மாநில தலைவர் அன்புமாரி ஆகியோர் தொடர்ந்து இஸ்லாம் மதத்திற்கு எதிராக கருத்து பதிவிட்டு வருவதாக கோவையை சேர்ந்த ஆசிக், என்ற நபர் தனது நபர்களிடம் புகார் அளித்ததாகவும் கூறப்படுகிறது. அவர்களை ஆசிக் கொலை செய்ய திட்டமிட்டதாகவும் கூறப்படுகிறது.
வாக்குமூலம்
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இவர்கள் அர்ஜூன் சம்பத், சக்திசேனா மாநில தலைவர் அன்புமாரி ஆகியோரை கொலை செய்ய திட்டமிட்டிருந்ததும், அதற்கான முன்னேற்பாடுகளை செய்து வந்ததாகவும் போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளதாக தகவல்கள் வருகிறது. இதன் காரணமாகத்தான் இவர்கள் கைது செய்யப்பட்டனர். இதன் முடிவில்தான் இன்று 4 இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பு சோதனை நடத்தியது.