காவிரி விவகாரத்தில் முதல்வரின் பேச்சு விஷமத்தனமானது.. திருப்பூர் மக்களவை உறுப்பினர் கண்டனம்
கோவை: நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் தமிழகத்தில் தற்கொலை செய்து கொண்ட 3 மாணவிகளின் மரணத்திற்கு, மத்திய அரசே காரணம் என திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பராயன் கூறியுள்ளார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த எம்.பி சுப்பராயன், கோவையில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது பேசிய அவர் இதுவரை நடைபெற்றுள்ள நீட் தேர்வுகளில் , 7 லட்சம் முற்பட்ட வகுப்பினர் வெற்றி பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
ஆனால் அதே சமயம் இந்த காலக்கட்டத்தில் 20 ,000 எஸ்.சி, எஸ்.டி வகுப்பினரும் 60,000 பொதுப்பிரிவினரும் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதிலிருந்து தெரிவது என்னவென்றால் வர்ணாசிரம நோக்கத்துடன் நீட் கொண்டு வரப்பட்டுள்ளது என சாடினார்.
சென்னைக்கு முக்கிய தகவல்.. தமிழகத்தில் எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் தகவல்
மேலும் பேசிய சுப்பராயன் 60 ஆண்டுகளாக மத்திய அரசு கட்டிக் காத்து வந்த 245 பொதுத்துறை நிறுவனங்களின் நிலை என்ன, அவற்றின் பங்குகளை தனியாருக்கு வழங்குவது தொடர்பாக பொதுவாக்கெடுப்பை நடத்த மத்திய அரசு தயாரா என கேள்வி எழுப்பியுள்ளார். இந்திய சந்தையில் வெளிநாட்டு பொருட்களை நிரப்பியதுதான் தேச பக்திக்கு அடையாளமாக மத்திய அரசு நினைக்கிறதா என வினவினார்.
ஏராளமான வேலை வாய்ப்புகளை வழங்கிய லட்சக்கணக்கிலான சிறுகுறு தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. இதுகுறித்து மத்திய அரசு வெள்ளை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.
காவிாி விவகாரம் குறித்து பேசிய மக்களவை உறுப்பினர் சுப்பராயன், பாஜக-விற்கு நெருக்கமாக இருப்பவர்கள் அதிமுகவி-னர் தான். அவர்கள் வாதாடியும், போராடியும் பெற வேண்டிய உரிமைகளில் ஒன்று தான் காவிரி நீர்.
ஆனால் சமீபத்தில் இதுபற்றி கருத்து தெரிவித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் இருந்து வெற்றி பெற்ற எம்பிக்கள் காவிரியிலிருந்து தண்ணீர் பெற்று தர முயற்சிப்பார்கள் என்று கூறினார். அவரின் இந்த பேச்சு விஷமத்தனமானது என கண்டனம் தெரிவித்தார்.
மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து தமிழகத்தையும் விவசாயத்தையும் அழிக்கும் நோக்கத்துடன் செயல்படுத்த நினைக்கும் திட்டம் தான் ஹைட்ரோ கார்பன் மற்றும் 8 வழிச்சாலை திட்டங்கள் என சுப்பராயன் குற்றம்சாட்டியுள்ளார். மக்களின் விருப்பதுக்கு மாறாக ஹைட்ரோ கார்பன், 8 வழிச்சாலை உள்ளிட்ட திட்டங்களை மத்திய அரசு திணிக்க முயற்சிப்பது கடும் கண்டனத்திற்குரியது என்றார்.