ஐ.எஸ்.ஐ.எஸ் தொடர்பு: கோவையில் என்.ஐ.ஏ. மீண்டும் சோதனை- ஹார்ட் டிஸ்க், ஆவணங்கள் பறிமுதல்
கோவை: கேரளாவை சேர்ந்த சினோத் என்பவருக்கும் ஐ.எஸ். இயக்கத்துக்கும் தொடர்பிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் தேசிய புலனாய்வு ஏஜென்சி அதிகாரிகள் (என்.ஐ.ஏ.) இன்று கோவையில் அவரது வீட்டில் சோதனை நடத்தினர். இச்சோதனையின் போது ஹார்ட் டிஸ்க் மற்றும் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.
இலங்கையில் தற்கொலைப்படை தாக்குதல்களை நடத்திய சஹ்ரான், இந்தியாவில் கேரளா மற்றும் தமிழகத்திலும் சமூக வலைதளங்கள் மூலம் தொடர்புகளை கொண்டிருந்தார். இதை ஏற்கனவே என்.ஐ.ஏ. அதிகாரிகள், இலங்கைக்கு தெரிவித்திருந்தனர்.
இலங்கை குண்டுவெடிப்புகளுக்குப் பின்னர் அந்நாட்டுக்குச் சென்ற என்.ஐ.ஏ. அதிகாரிகள் மேலும் பல தகவல்களை பகிர்ந்து கொண்டனர். இதனடிப்படையில் கோவையைச் சேர்ந்த முகமது அசாரூதின், ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தின் தளபதியாக செயல்பட்டது தெரியவந்து.
அசாருதீன் மீது வழக்குப் பதிவு செய்து கோவையில் பல இடங்களில் சோதனை நடத்தினர். இச்சோதனையின் முடிவில் அசாருதீன் மற்றும் கூட்டாளிகள் கைது செய்யப்பட்டனர்.
இதன் பின்னர் மதுரையிலும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தினர். சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்ட தீவிரவாதிகளுக்கும் அசாருதீனுக்கும் தொடர்பு இருக்கிறதா? என்றும் விசாரணை நடத்தப்பட்டது.
இந்நிலையில் கேரளாவை சேர்ந்த சினோத் என்கிற கம்ப்யூட்டர் சர்வீஸ் சென்டர் நடத்தி வரும் நபரும் என்.ஐ.ஏ. அதிகாரிகளின் விசாரணை வளையத்துக்குள் சிக்கினார். அவரது கோவை வீட்டில் இன்று என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இச்சோதனையின் போது ஹார்ட் டிஸ்க் மற்றும் முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றிச் சென்றனர்.