கோவையில் லஷ்கர் தீவிரவாதிகள் நடமாட்டம் இல்லை.. போலீஸ் தகவல்.. மக்கள் நிம்மதி
டெல்லி: கோவை மாநகரில் லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் புகுந்திருப்பதாக வந்த தகவலைத் தொடர்ந்து நடந்த தீவிர தேடுதல் வேட்டை மற்றும் விசாரணையில், எந்த ஒரு நடமாட்டமும் இல்லை என்று தெரிய வந்திருப்பதாக காவல்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து கோவை மாநகர மக்கள் பெரும் நிம்மதி அடைந்துள்ளனர்.
ஆகஸ்ட் 22ம் தேதி மத்திய உளவுத்துறை, தமிழகத்திற்குள் 6 லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் புகுந்திருப்பதாகவும், அவர்கள் கோவையை மையமாகக் கொண்டு நாச வேலைகளில் ஈடுபடவுள்ளதாகவும் எச்சரிக்கை விடுத்தது. இதையடுத்து தமிழகம் முழுவதும் தீவிர கண்காணிப்பு மற்றும் தேடுதல் வேட்டைகள் மேற்கொள்ளப்பட்டன.
குறிப்பாக கோவை, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் கண்காணிப்பும், தேடுதல் வேட்டையும் தீவிரப்படுத்தப்பட்டது. தொடர்ந்து நடந்து வந்த விசாரணை உள்ளிட்டவற்றுக்குப் பின் தற்போது கோவை நகரில் லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் யாரும் இல்லை என்று தெரிய வந்திருப்பதாக கூறப்படுகிறது.
விக்ரமை உயிர்த்தெழ வைக்கும் முயற்சிகளில் தொய்வு?
உளவுத்துறை எச்சரிக்கையைத் தொடர்ந்து கோவையில் போலீஸார் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டனர். உளவுத்துறை தகவல்களின் அடிப்படையில் தேடுதல் வேட்டையும் நடத்தப்பட்டு வந்தது. தொடர்ந்து நாங்கள் உஷார் நிலையில் இருக்கிறோம் என்று போலீஸ் தரப்பில் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவையில் லஷ்கர் தீவிரவாதிகள் நடமாட்டம் இல்லை என்று காவல்துறை தெரிவித்துள்ளதால் பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.