இரு நாக்கு உடையவர்கள்... பல ஆண்டுகளாக பார்க்கிறேன்... கமல்ஹாசன் கடும் தாக்கு
Recommended Video
கோவை: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தர்ணா போன்று தமிழகத்திலும் நடந்திருக்க வேண்டும். ஆனால் நடக்கவில்லை என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
கொல்கத்தா காவல் ஆணையரை சி.பி.ஐ. விசாரிக்க வந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து முதல்வர் மம்தா பானர்ஜி 3 வது நாளாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
மம்தா பானர்ஜிக்கு எதிராக எதிர்க்கட்சி தலைவர்கள் பலர் தங்களது ஆதரவை தெரிவித்துள்ளனர்.
சுயமரியாதை
இந்தநிலையில், கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை கமல்ஹாசன் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது. மம்தா பானர்ஜி தர்ணா போன்று தமிழகத்திலும் நடந்திருக்க வேண்டும். ஆனால் நடக்கவில்லை. சுயமரியாதையுள்ள எந்த அரசும் இதுபோன்ற அழுத்தத்தை ஏற்றுக்கொள்ளாது என விமர்ச்சித்தார்.
பேராசையின் உச்சகட்டம்
உடுமலையில் முகாமிட்டுள்ள காட்டு யானை சின்னதம்பி குறித்த கேள்விக்கு பதிலளித்த கமல்ஹாசன், மிருகங்களின் இடத்தை ஆக்கிரமிப்பது பேராசையின் உச்சகட்டம் எனவும், அதற்கான விளைவுகளை நாம் ஏற்றுகொள்ளத்தான் வேண்டும் என்றார்.
இரு நாக்கு உடையவர்கள்
மேலும், சின்னதம்பி யானையை கும்கி ஆக்குவது குறித்து தமிழக அரசு இரு வேறு கருத்துகளை தெரிவிப்பது தமிழக அரசின் தனி குணாதிசியம். அவர்கள் இரு நாக்கு உடையவர்கள். நான் பல ஆண்டுகளாக பார்த்து வருகிறேன் என்றும் கூறினார்.
ஏளனம் செய்யக்கூடாது
நவீனத்தை ஏளனம் செய்யக்கூடாது. அதே சமயம், ஓட்டை பாத்திரத்தில் தண்ணீர் அள்ள முடியாது என்பதால் வாளியில் ஓட்டை இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் விளக்கமளித்தார்.
கூட்டணிக்கு அழைப்பு
தமிழகத்திற்கு பேரிடரின் போது வராத மோடி, தற்போது, அடிக்கடி வருவதற்கு தேர்தல் தான் காரணம். மக்கள் அல்ல. பிரதான கட்சிகளில் இருந்து கூட்டணிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆனால், அதைப்பற்றி விவாதிக்க முடியாது என்று கூறினார்.