புத்துணர்வு முகாமில்... கோயில் யானை மீது கொடூர தாக்குதல்... இருவர் சஸ்பெண்ட்
கோவை: தேக்கம்பட்டி பகுதியில் யானைகள் புத்துணர்வு நல்வாழ்வு முகாமில் பாகன்கள் யானையைக் கடுமையாகத் தாக்கும் வீடியோ வெளியானதைத் தொடர்ந்து பாகனும், உதவி பாகனும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
Recommended Video
தமிழகத்தில் யானைகள் புத்துணர்வு முகாம் கடந்த 7ஆம் தேதி கோயம்புத்தூர் மாவட்டம் தேக்கம்பட்டி பகுதியில் தொடங்கியது. இதற்காக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் யானைகள் தேக்கம்பட்டிக்கு அழைத்து வரப்பட்டுள்ளன.
இந்நிலையில், இன்று யானைகள் புத்துணர்வு முகாமில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கோயில் யானை ஜெயமால்யதாவை அந்த யானை பாகன் வினில்குமாரும் அவரது உதவி பாகனும் அடித்துத் துன்புறுத்துவதும் காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலானது.
அதில் கட்டி வைக்கப்பட்டுள்ள யானையை இருவரும் சேர்ந்த கொடூரமாகத் தாக்குகின்றனர். அந்த யானையோ வலி தாங்க முடியாமல் பிளிறுகிறது. பாகன்களின் கட்டளைகளை மதிக்காததால் யானை தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த வீடியோ வன உயிரியில் ஆர்வலர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் யானையைத் தாக்கிய பாகன் வினில் குமார், பாகனுக்கு உதவியாக இருந்த சிவபிராகசம் ஆகியோரை சஸ்பெண்ட் செய்து இந்து அறநிலைத் துறை உத்தரவிட்டுள்ளது. இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில், நேற்று மாலை கால் சங்கிலியை கழட்டிய யானை, பாகனின் காலை மிதித்ததாகவும், அந்த யானை அங்கிருந்து வெளியேறி இருந்தால் மற்றவர்களுக்கு ஆபத்து ஏற்படும் என்ற காரணத்தினால் யானையை எச்சரிக்கும், வகையில் தாக்கியதாக அவர்கள் இருவரும் வாக்கு மூலம் அளித்துள்ளனர்.
அதேசமயம் யானைகளைக் கொடுமைப்படுத்துதல் குற்றம் என்ற பிரிவில் வனத்துறையினர் இருவர் மீதும் நடவடிக்கை எடுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது