"ஆபரேஷன் விநாயக்".. கிட்டத்தட்ட சக்சஸ்.. விநாயகனை பிடிச்சாச்சு, அடுத்து சின்னத்தம்பிதான்!
காட்டு யானைகளை பிடிக்க வனத்துறை முயன்று வருகிறது.
கோவை: "ஆபரேஷன் விநாயக்" கிட்டத்தட்ட சக்ஸஸ்தான்!! இதனை வனத்துறை அதிகாரிகள் ரொம்ப மும்முரமாக செயல்படுத்தி வருகிறார்கள். கோவை மாவட்டம் வரப்பாளையம், தடாகம் என பல்வேறு கிராம பகுதிகளுக்கு 6 மாசத்துக்கு முன்னாடி 2 யானைகள் வந்தன.
இந்த 2 யானைகளும் அங்கிருக்கும் விளைநிலங்களை சேதப்படுத்தி மக்களுக்கு ரொம்பவே தொந்தரவை கொடுத்து வந்தன.
சின்னதம்பி, விநாயகன்
அவைகளை விரட்டியும் காட்டுக்குள் போகாமல் தங்களையே சுற்றி சுற்றி வந்ததால் அந்த யானைகளுக்கு மக்கள், சின்னத்தம்பி, விநாயகன் என்று பெயரிட்டு அழைத்து வந்தனர். ஆனாலும் பிழைப்பையே கெடுத்து கொண்டிருக்கும் யானைகளை எப்படியாவது பிடித்து வனப்பகுதியில் கொண்டு போய் விட்டு விடுங்கள் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
கலெக்டர் வேண்டுகோள்
அதன்படியே இரு காட்டு யானைகளையும் பிடித்து முதுமலை வனப்பகுதியில் விட்டுவிடுமாறு கோவை மாவட்ட கலெக்டர் ஹரிஹரன் போன மாசம் உத்தரவிட்டிருந்தார். இதற்கான நடவடிக்கையை வனத்துறையினர் நீண்ட நாளுக்கு பிறகு எடுத்துள்ளனர்.
ஆபரேஷன் விநாயக்
இதற்காக கும்கி யானைகள் சேரன், விஜய், பொம்மன், வசீம் ஆகியவை வரவைழக்கப்பட்டது. 4 கும்கி யானைகள் காட்டு யானையை பிடிக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. யானையை பிடிக்கும் இந்த திட்டத்துக்கு "ஆபரேஷன் விநாயக்" என்று பெயர் வைத்துள்ளார்களாம்.
அகப்பட்ட விநாயகன்
இன்று அதிகாலை 5.30 மணிக்கு இரண்டு யானைகளில் ஒன்றான விநாயகனை வனத்துறையினர் பிடித்துவிட்டனர். மயக்க ஊசி செலுத்தப்பட்டதும், யானை மயக்கமாகி விட்டது. இதனை இனிமேல் லாரியில் ஏற்றி முதுமலை காட்டுக்குள் கொண்டு போக போகிறார்கள். ஆனால் வழியில் டிராபிக் ஜாம் ஆகிவிடக்கூடாது என்பதால், கோவை, நீலகிரி மாவட்ட கண்காணிப்பாளர்களிடம் நெரிசலை தவிர்க்க வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
சின்னதம்பி மட்டும்தான்
இப்போது ஊருக்குள் இருப்பது சின்னத்தம்பி மட்டும்தான். அதனால் வனத்துறையினர் சின்னதம்பியை கண்காணித்து வருகிறார்கள். அதுவும் பிடிபட்டுவிட்டால் முதுமலையில் கொண்டு போய் விட்டுவிட முடிவு செய்துள்ளார்கள். எனவே ஆபரேஷன் விநாயக் விரைவில் முழுமையாக முடிவடையும் என சொல்லப்படுகிறது.