ஏன் வாந்தி எடுக்கிறே.. மாசமா இருக்கியா... தாறுமாறாக பேசிய தலைமை ஆசிரியை.. கொந்தளித்த மக்கள்
சாதி பெயரை சொல்லி மாணவர்களை பள்ளி தலைமை ஆசிரியை திட்டி உள்ளார்
Recommended Video
கோவை: "சனியனே.. மூதேவி.. எங்காவது போய் தொலையேன்.." என்று பள்ளி மாணவ-மாணவிகளை பள்ளி தலைமை ஆசிரியை சகட்டுமேனிக்கு திட்டி உள்ளார். அப்போது சாதி பெயரையும் குறிப்பிட்டு திட்டியதால், பெற்றோர்கள் திரண்டு வந்து பள்ளியை முற்றுகையிட்டு விட்டனர்!
கோவை சரவணம்பட்டி அடுத்த கரட்டுமேடு பகுதியில் மாநகராட்சி ஆரம்பபள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் அதே பகுதியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்த பள்ளியில் லட்சுமணன் என்பவரின் 11 வயது மகள் 4-ம் வகுப்பும், 9 வயது மகன் 3-ம் வகுப்பும் , அம்ஸ் கண்ணன் என்பவரின் 10 வயது மகள் 4-ம் வகுப்பும் படித்து வருகின்றனர்.
ஜெயந்தி
இந்நிலையில் பள்ளியின் தலைமையாசிரியை ஜெயந்தி பேபி என்பவரது 11 வயது மகளை பிரம்பால் அடித்துள்ளார். இதில், சிறுமிக்கு கை, தொடைகளில் வீக்கம் ஏற்பட்டுள்ளது. அதே மாணவியை சாதி பெயரை சொல்லியும் திட்டியதாக தெரிகிறது.
முழக்கம்
இதனால் கொதிப்படைந்த பெற்றோர்கள், பள்ளியை முற்றுகையிட்டு, தலைமையாசிரியை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என முழக்கமிட்டனர். இது பற்றி கூறிய பெற்றோர், "இப்படியா குழந்தைகளை அடிக்கிறது? படிக்க வர்ற இடத்துல எதுக்கு சாதி, மதத்தை பத்தி பேசணும்? என் பொண்ணு இங்கதான் படிக்குதுங்க. சனியன், மூதேவின்னு திட்டி இருக்காங்க.
பயம் இல்லை
ஏற்கனவே இந்த தலைமையாசிரியை 2 முறை இப்படிதான் நடந்துக்கிட்டாங்க. இதுக்கு மேல எப்படி பொறுமையா இருக்கிறது? இதனாலதான் எத்தனையோர் தங்கள் பிள்ளைகளை இந்தப் பள்ளியில் சேர்க்காமல் சரவணம்பட்டியில் கொண்டு போய் சேர்க்கிறார்கள். இதை பத்தியெல்லாம் கேட்டதுக்கு, நீ எங்க வேணாலும் போய் சொல்லிக்க.. எனக்கு பயம் இல்லைன்னு சொல்றாங்க.
முற்றுகை
என் பொண்ணுக்கு 10 வயசு.. சாப்பிட்டது சேராமல் வாந்தி எடுத்து இருக்கிறாள். இதை பார்த்துட்டு, "என்ன மாசமா இருக்கியா"ன்னு அவங்க கேட்டிருக்காங்க. ஒரு குழந்தைகிட்ட இப்படியா பேசறது?" என்று கொதித்து போய் கேட்டார். இதனிடையே தலைமை ஆசிரியை மாணவிகளிடம் தரக்குறைவான வார்த்தைகளால் பேசும் ஆடியோ பதிவுகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன.