ரஜினிக்கு வார்னிங்.. கோவையில் ஆயிரக்கணக்கான பெரியார் ஆதரவாளர்களின் நீலச்சட்டை பேரணியில் தீர்மானம்
கோவை: பொதுமக்களின் போராட்டங்களை இழிவுபடுத்தும் வகையில் பேசுவதை நடிகர் ரஜினிகாந்த் நிறுத்த வேண்டும் என்று கோவையில் பல்லாயிரக்கணக்கான பெரியார் ஆதரவாளர்கள் பங்கேற்ற நீலச்சட்டை பேரணியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கோவையில் அம்பேதக்ர் நினைவு நாளை முன்னிட்டு பெரியார் ஆதரவாளர்கள் ஒன்றிணைந்து நீலச்சட்டை பேரணியை நடத்தினர். இதில் பல்வேறு இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் பல்லாயிரக்கணக்கில் நீலச்சட்டையுடன் பங்கேற்றனர். கோவை அண்ணா சாலையில் இருந்து மகளிர் பல்தொழில்நுட்பக் கல்லூரி வரை இப்பேரணி நடைபெற்றது.
பின்னர் சாதி ஒழிப்பு மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டில் தி.க. தலைவர் கீ. வீரமணி, திராவிடர் விடுதலை கழகத் தலைவர் கொளத்தூர் மணி, தந்தை பெரியார் தி.க. பொதுச்செயலாளர் கோவை ராமகிருட்டிணன் உள்ளிட்ட பல இயக்கங்களின் தலைவர்கள் பங்கேற்றனர். இம்மாநாட்டில் மொத்தம் 33 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தமிழக மக்களின் போராட்டங்களை இழிவுபடுத்தும் வகையில் நடிகர் ரஜினிகாந்த் தொடர்ந்து பேசிவருவதை நிறுத்த வேண்டும்; சாதியை பாதுகாக்கும் மனுதர்ம நூலை மே 31-ந் தேதி தமிழகம் முழுவதும் தீயிட்டு எரிக்கும் போராட்டம் நடத்தப்படும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.