பெட்ரோல் குண்டுகள் வீச்சு.. மக்களே பயப்படாதீங்க.. புகார் எண்கள் வழங்கிய கோவை மாவட்ட கலெக்டர்
கோவை: கோவையில் தொடர்ந்து பெட்ரோல் குண்டு வீசப்பட்ட நிலையில் பொதுமக்கள் யாரும் பயப்பட வேண்டாம் என மாவட்ட கலெ க்டர் ஷமிரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் சந்தேக நபர்கள் பற்றிய விபரங்களை புகாராக அளிக்க தொடர்பு எண்களை அவர் வெளியிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் கடந்த 3 நாட்களாக பல இடங்களில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டு வருகின்றன. இந்த பெட்ரோல் குண்டானது கோவையில் முதல் முதலாக சித்தாபுதூரில் உள்ள மாநகர பாஜக அலுவலகம் மீது வீசப்பட்டது.
அதிர்ஷ்டவசமாக இந்த குண்டு வெடிக்கவில்லை. இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில் தொடர்ந்து கோவையின் பல இடங்களில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன.
கோவையில் பெட்ரோல் குண்டு வீச்சு.. நடவடிக்கை எடுக்காவிட்டால் மிகப்பெரிய போராட்டம்-ஹிந்து முன்னணி
கோவையில் துவங்கிய பெட்ரோல் குண்டு வீச்சு
அதாவது கோவை சித்தாபுதூர் பாஜக அலுவலகத்தை தொடர்ந்து கோவை ஓப்பணக்கார வீதியில் உள்ள துணிக்கடை மற்றும் 100 அடி சாலையில் உள்ள ரத்தினபுரி பாஜக மண்டலத் தலைவர் மோகனுக்கு சொந்தமான கடை மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. மேலும் பொள்ளாச்சி குமரன் நகர் பகுதியில் பாஜக நிர்வாகிகள் பொன்ராஜ், சிவா மற்றும் இந்து முன்னணி வார்டு பொறுப்பாளர் சரவணக்குமார் ஆகியோரின் வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன. பாக்கெட் பெட்ரோல் வீசப்பட்டு வாகனங்களுக்கும் தீவைக்க முயற்சி செய்யப்பட்டது.
போலீஸ் தீவிர விசாரணை
அதன்பிறகு நேற்று இரவு கோவை புதூர் பகுதியில் ஆர்எஸ்எஸின் கிளை அமைப்பான சமஸ்கிருத பாரதி அமைப்பின் தமிழக-கேரள கேந்திர பொறுப்பாளரான ஆனந்த கல்யாண கிருஷ்ணன் என்பவரின் வீட்டிலும் நேற்று இரவு பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இதுதொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஒவ்வொரு சம்பவம் தொடர்பாகவும் 3 தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தீவிர ஆலோசனை
கோவை, பொள்ளாட்சி, மேட்டுப்பாளையம், ஈரோடு உள்ளிட்ட இடங்களில் பாஜக அலுவலகம், பிரமுகர்கள் ஆர்எஸ்எஸ் பிரமுகர்களின் வீடு அலுவலகங்களில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டு நிலையில்சட்ட ஒழுங்கு தொடர்பாக தலைமைச்செயலாளர் இறையன்பு தலைபமையில் இன்று ஆலோசனை நடந்தது. டிஜிபி சைலேந்திரபாபு, உளவுத்துறை ஏடிஜிபி தேவாசீர்வாதம் உள்ளிட்டோரும் ஆலோசனையில் பங்கேற்றனர்.
கலெக்டர் பேட்டி
இந்நிலையில் இன்று செய்தியாளர்களை கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: இன்றைய தினம் தலைமைச் செயலாளர் தலைமையில் 17 மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை கண்காணிப்பாளர்கள், காவல்துறை ஆணையர் உள்ளிட்ட உயர் அலுவலர்களுடனான காணொளி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. சட்ட ஒழுங்கு சம்பந்தமான ஆலோசனை நடைபெற்றது. குறிப்பாக கோயம்புத்தூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களில் நடந்த சம்பவங்கள், தனிப்பட்ட முறையில் நடந்த சம்பவங்கள் அதைப் பற்றி ஆய்வு செய்தார்கள்.
அனைவரும் ஒத்துழைப்பு
இந்த ஏழு சம்பவங்களிலும் பொதுமக்களின் உயிருக்கோ, உடைமைக்கோ மேஜர் சேதம் ஒன்றும் இல்லை. அதனால் ஊடகங்கள் வாயிலாக என்ன சொல்ல விரும்புகிறேன் என்றால் பதற்றப்படவோ அச்சப்படவோ வேண்டிய சூழ்நிலை இல்லை. இந்த சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் மீது சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல மத நல்லிணக்கத்திற்கான கூட்டங்கள் மாவட்ட ஆட்சியர், எஸ்பி உள்ளிட்டோரின் தலைமையில் 92 ஜமாத் தலைவர்கள் கூப்பிட்டு கூட்டம் நடத்தினோம். அவர்களுடைய ஒத்துழைப்பும் கோரப்பட்டுள்ளது. 3 மணி நேரத்தில் இந்து அமைப்புகளின் தலைவர்களோடு கூட்டம் நடைபெற உள்ளது. அனைவரும் மாவட்ட நிர்வாகத்திற்கும், காவல்துறைக்கும் ஒத்துழைப்பு தருகிறார்கள்.
குழு அமைப்பு
ஊர்களில் அல்லது மாநகர் பகுதிகளில் ஏதாவது சம்பவங்கள் நிகழ்ந்தால், வெளி மாவட்டத்தையோ, வெளி மாநிலத்தைச் சேர்ந்த நபர்கள் வரும் பட்சத்தில் உடனடியாக காவல்துறைக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் தகவல் கொடுப்பதற்காக தனியாக பொதுமக்கள் அமைப்புகள், கிராம நிர்வாக அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் சேர்ந்த குழுவை அமைத்திருக்கிறோம்'' என்றார்.
தொடர்பு எண்கள் அறிவிப்பு
அதோடு கோவை மாவட்ட கலெக்டர் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
கோவை மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக நடைபெற்று வரும் நிகழ்வுகள் தொடர்பாக யாரும் அச்சப்பட வேண்டியது இல்லை. பொதுமக்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் மற்றும் வன்முறையை தூண்டும் வகையில் மேற்படி நிகழ்வுகள் குறித்தும், சமூக வலைதளங்களில் தவறான தகவல்கள் பரப்பும் நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தங்கள் பகுதியில் ஏதேனும் அசம்பாவிதங்கள் நிகழும் வண்ணம் இருந்தாலோ, சந்தேகிக்கப்பட கூடிய நடவடிக்கைகளில் ஏதேனும் நபர்கள் ஈடுபட்டாலோ உடனடியாக மாவட்ட காவல் துறை கட்டுப்பாட்டு அறைக்கு (100/0422-2300970, வாட்ஸ்அப் 8190000100/ 0422-2300600, வாட்ஸ்அப் 9498101165) தகவல் தெரிவிக்க வேண்டும் என கூறியுள்ளார்.